கந்த சஷ்டி 2022: சூரசம்ஹாரம் காண திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள்..என்னென்ன ஏற்பாடுகள்
தூத்துக்குடி: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளைய தினம் நிகழ உள்ள சூரசம்ஹாரத்தைக் காண இன்று முதலே அலைகடலென பக்தர்கள் திரண்டுள்ளனர். திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
முருகப்பெருமானின் பல ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடந்தாலும் புராண கதைப்படி திருச்செந்தூர் யுத்தம் நிகழ்ந்த தலம். இதனால் ஜெயந்திபுரம் என்றும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது.
கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். அறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
குழந்தை வரம் தரும் கந்த சஷ்டி விரதம்..சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்..காரணம் என்ன தெரியுமா?
திருச்செந்தூர்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி எழுந்தருளல் ஆகியவை நடந்து வருகின்றன. ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவில்களில் சஷ்டி விரதம் இருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சூரசம்ஹாரத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். கோவில் வளாகங்களில் அலைகடலென பக்தர்கள் குவிந்துள்ளனர்.
கனிமொழி ஆய்வு
திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்துக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கனிமொழி எம்பி நேற்று ஆய்வு செய்தார். கோயில் வளாகத்தில் விரதமிருக்க அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்கள், அன்னதானக் கூடத்தை பார்வையிட்டு, அங்கு தங்கியுள்ள பக்தர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
நாளை சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் மற்ற கால பூஜைகளும் நடைபெறும். மாலை 4 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
திருக்கல்யாணம்
நாளை மறுநாள் 31ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணியளவில் சுவாமி அம்பாள் தோள் மாலை மாற்றும் வைபவமும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறும். கந்த சஷ்டி விழாவையொட்டி பக்தர்கள் வருகை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் நேற்று திருச்செந்தூரில் ஆய்வு மேற்கொண்டார். எஸ்பி.க்கள் தூத்துக்குடி பாலாஜி சரவணன், திருநெல்வேலி சரவணன் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு நாளைய தினம் சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது.