திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 1: மார்கழி பாவை நோன்பு பாடினால் திருமணம் கைகூடும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்கழி மாதம் இன்று பிறக்கும் நிலையில் பாவை நோன்பு இருந்தால் திருமணம் கைகூடும், நினைத்த காரியம் நிறைவேறும் என்பார்கள். இதற்காக அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டை பெருக்கி, கோலமிட்டு விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை படிப்பது மனதிற்கு நிம்மதியை தரும்.

இந்த பாவை நோன்பானது கன்னிப் பெண்களால் நோற்கப்படுவது. நல்ல கணவன் கிடைக்க அதிகாலையில் எழுந்து பாசுரம் படிப்பது நல்லது. ஆண்டாள் 30 பாசுரங்களை அருளியுள்ளார். இவை மார்கழி மாதங்களில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பாடப்படுகிறது.

margazhi thiruppavai

கலியுகத்தில் பிறந்த ஆண்டாள், பெருமாளையே திருமணம் செய்து கொள்வேன் என சபதமிட்டு, பாவை நோன்பை மேற்கொண்டாள் என்பது ஐதீகம்! இந்த முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சொல்வது.

மார்கழி மாதத்தில் சிவபெருமானை வணங்குபவர்கள் திருவெம்பாவை பாடுவார்கள். மணிவாசகப் பெருமான் பாடிய திருவெம்பாவை மார்கழி மாதத்திற்கே ஒரு தனித்துவமான பாடலாகும். இது மொத்தம் 20 பாடல்களை கொண்டது.

திருப்பாவை பாடல்- 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பாடலின் விளக்கம்: அழகிய அணிகலன்களை அணிந்து கொண்டு, செல்வ வளங்களை கொண்ட ஆயர்பாடியில் இருக்கும் அழகிய கன்னிப்பெண்களே, எழுந்திருங்கள். அதிகாலையிலேயே நாம் நீராட கிளம்பலாம். கூர்மையான வேலுடன் நம்மை பாதுகாத்து வரும் நந்தகோபன், யசோதா ஆகியோரின் வீரமிக்க மகன். அவனுக்கு கார்மேகத்தைப் போன்ற மேனி, தாமரை போன்ற முகத்தில் சிவந்த கண்களை கொண்டவன், சூரியனை போல் பிரகாசமான முகம் இருந்தாலும் இரவு நேரத்தில் குளிர்ச்சியை தரும் மதியை போல் கருணை கொண்டதாக இருக்கிறான்.

அந்த நாராயணனே கண்ணனாக பிறந்து நமக்காக காத்திருக்கிறான். அவனை நாம் பாடி புகழ்ந்தால் இந்த உலகம் நம்மை வாழ்த்தும் என ஆண்டாள் பாடுகிறாள்.

இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் வைத்துக் கொண்டு பாடுகிறாள்.

திருவெம்பாவை பாடல் - 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.

விளக்கம்- வாள் போன்ற நீண்ட கண்களை கொண்ட தோழியே! ஆதியும் அந்தமும் இல்லாத ஜோதி வடிவிலான சிவபெருமான் குறித்து நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோமே அது உங்களுக்கு கேட்கவில்லையா? இப்படியா தூங்குவது? அந்த மகாதேவனுடைய நெடிய சிலம்பு அணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடுகிறோம்.

அந்த பாடலை கேட்டு தெருவில் சென்ற ஒரு பெண் விம்மி அழுது, ஆனந்தத்தில் தரையில் புரண்டு மூர்ச்சையாகிவிட்டாள், ஆனால் நீங்கள் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களே, உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா என பெண்கள் பாடுகிறார்கள்.

அதாவது திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி மாதத்தில் அதிகாலையில் உலா வருகிறார். அவரை தரிசனம் செய்ய பெண்கள் எல்லாம் பயபக்தியுடன் காத்துக் கிடக்கிறார்கள். இந்த பிறவி பயனை அடைய தங்களை போல் தங்கள் தோழிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர்களை எழுப்புகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+