சபரிமலையில் மகரவிளக்கு..ஜோதியை தரிசிக்க வனப்பகுதி குடில்களில் தங்கும் பக்தர்கள்..பிடிபட்ட நாகங்கள்
சபரிமலை:
ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை மாலை நடைபெற உள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வரும் நிலையில் வனப்பகுதிகளில் ஆங்காங்கே குடில்கள் அமைத்து பக்தர்கள் தங்கி வருகின்றனர். பக்தர்கள் எழுப்பும் சரணகோஷம் சபரிமலை எங்கும் எதிரொலிக்கிறது. வனப்பகுதியில் ஏராளமான நாகங்கள் பிடிபட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சபரிமலையில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 90,000 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 14 ம் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்டதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நாளைய தினம் மகர ஜோதியை தரிசனம் செய்ய வனப்பகுதிகளில் ஆங்காங்கே குடில்கள் அமைத்து தங்கியுள்ளனர். பக்தர்கள் எழுப்பும் சரணகோஷம் சபரிமலை எங்கும் எதிரொலிக்கிறது.
வனப்பகுதிகளில் காட்டு தீ பரவாமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியை முடுக்கிவிட்டுள்ளனர். காட்டுத் தீயை தடுக்க மட்டும் பம்பையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் எருமேலி-கரிமலை சாலை மற்றும் சத்திரம்- புல்லுமேடு சாலையில் கூடுதல் தீயணைப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு பகலாக ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பம்பை மற்றும் சன்னிதானத்தில் வனத்துறைக்கு சொந்தமான இரண்டு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது.
வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள தனி குழுவும் 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்ரோஷமான பன்றிகளை பிடித்து வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 84 காட்டுப்பன்றிகள் வேறு இடத்தில் இடம் பெயர்ந்தன. இதுவரை 120 பாம்புகள் பிடிபட்டுள்ளன. நான்கு ராஜ வெம்பால , பத்து நாகப்பாம்புகள், பத்து விரியன் பாம்புகள் மற்றும் அதிக விஷமுள்ள பாம்புகள் பிடிபட்டுள்ளன. இவைகள் பக்தர்கள் நடமாட்டம் இல்லாத வேறு காட்டு பகுதிக்கு மாற்றப்பட்டது.
பாத யாத்திரை ஆக வரும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ ராபிட் ரெஸ்பான்ஸ்சிபிள் குழுவினர் தயார் நிலையில் உள்ளது. சபரிமலையில் வனக்காவலர்கள், சுற்றுச்சூழல் காவலர்கள், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் நேற்று பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. குருசுவாமி குளத்தினால் கங்காதரன் பிள்ளையின் தலைமையில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டிருந்த திருவாபரணங்கள் தங்கள் தலையில் ஏந்தி சபரிமலைக்கு பாதயாத்திரையாக எடுத்துச் சென்றனர். பந்தளம் அரண்மனையின் பிரதிநிதியாக இம்முறை ராஜராஜ வர்மா ஊர்வலத்தை முன்னின்று ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
நாளைய தினம் திருவாபரணம் சபரிமலை சன்னிதானம் சென்றடையும். மகரஜோதி நாளில் பகல் 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மகர ஜோதி தரிசனம் முடிந்து 15 ஆம் தேதி காலை முதல் மறுபடியும் சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மாலையில் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடைபெறும் போது பொன்னம்பல மேட்டில் மகரஜோதி ஒளிரும். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்வார்கள்.