திருப்பதியில் ஏப்ரல் மாதம் ஏழுமலையான் தரிசனம்... ஆர்ஜித சேவை.. அங்கப்பிரதட்சணம் டிக்கெட் ரிலீஸ்
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் வழிபட விரும்பும் பக்தர்கள் எந்த நாளில் எப்போது டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் நிர்வாகம் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டுள்ளது. அங்கப்பிரதட்சணம், மூத்த குடிமக்கள் தரிசனம், 300 ரூபாய் தரிசன கட்டணம் எப்போது வெளியாகும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதலப்பாத பத்மாராதனை சேவை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் பெற விரும்பும் பக்தர்கள் இன்று காலை 10 மணிக்கு துவங்கி 20 ஆம் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தான வெப்சைட்டில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின்னர் கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் குழுக்களில் டிக்கெட் கிடைக்க பெறும் பக்தர்களுக்கு குறுந்தகவல் மூலம் தகவல் அளிக்கப்படும்.

22 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் உரிய கட்டணத்தை செலுத்தி பக்தர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய வேண்டும். ஏப்ரல் மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற இருக்கும் கல்யாண உற்சவம், கட்டண பிரம்ம உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
ஏப்ரல் மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் காணொளி மூலம் பங்கு கொண்டு வழிபட விரும்பும் பக்தர்கள் 22 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு துவங்கி டிக்கெட்டைகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி துவங்கிய 23 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் வருடாந்திர வசந்த உற்சவத்திற்கான டிக்கெட்டுகள் இம்மாதம் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
ஏப்ரல் மாதம் அங்கப்பிரதட்சனம் செய்து ஏழுமலையானை வழிபட விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்று ஏப்ரல் மாதம் வழிபட விரும்பும் பக்தர்கள் இமாதம் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான முன்னுரிமை அடிப்படையிலான தரிசன டோக்கன்கள் இம்மாதம் 23ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 டிக்கெட்டுகள் வரும் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
ஏப்ரல் மாதம் திருப்பதி, திருமலையில் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை மூலம் சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 27ஆம் தேதி காலை 11:00 மணிக்கு தங்களுடைய பெயர்களை தேவஸ்தான வெப்சைட்டில் பதிவு செய்து கொள்ளலாம். அன்று மதியம் 12 மணி முதல் திருப்பதி மலையில் நடைபெறும் நவநீத சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும், பகல் ஒரு மணி முதல் உண்டியல் காணிக்கை பணம் கணக்கிடும் பரக்காமணி சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும் தங்கள் பெயர்களை தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.Ap.Gov.in வெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications