வைகுண்ட ஏகாதசியில் திருப்பதி உண்டியலில் காணிக்கையை கொட்டிய பக்தர்கள்..இத்தனை கோடியா? வரலாற்று சாதனை
திருப்பதி: ஏழுமலையானுக்கு பக்தர்கள் நேற்று ஒரே நாளில் காணிக்கையை அள்ளி கொடுத்துள்ளனர். திருப்பதி வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வசூலானது. இதற்கு முன்பு ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.6 கோடிக்கு மேல் உண்டியல் வசூலாகியிருந்தது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று 69,414 பேர் தரிசனம் செய்தனர். 18,612 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சில நிமிட தரிசனத்திற்காக நாள் கணக்கில் கூட பக்தர்கள் காத்திருக்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.
ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்துவார்கள். பணக்காரர்கள் லட்சக்கணக்கில் பணத்தை உண்டியலில் செலுத்தினாலும் ஏழை மக்கள் தங்களால் இயன்ற அளவு உண்டியலில் செலுத்துவார்கள்.
2022ஆம் ஆண்டு ரூ1,441.34 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் எதிர்பார்ப்புகளை தாண்டி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது தேவஸ்தான வரலாற்றில் சாதனையாகும். 2022ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானமாக ரூ1,441.34 கோடி கிடைத்துள்ளது.
இது கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக கோவிலில் சாமி தரிசனம் செய்யாமல் இருந்த பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வருமானம் ஆகும். தேவஸ்தானம் வெளியிட்ட ஆண்டு பட்ஜெட்டில் 2022ஆம் ஆண்டு உண்டியல் வருவாய் ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உண்டியல் வருமானம் கிடைத்திருப்பது சாதனையாகும்.
இதனிடையே வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வரும் 11ஆம் தேதி வரை தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 20 ஆயிரம் பேரும், இலவச தரிசன டிக்கெட்டில் 50 ஆயிரம் பேரும், ஸ்ரீவாணி அறக்கட்டளையின் சார்பில் 2 ஆயிரம் பேர் என மொத்தம் 8 லட்சம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி முதல் நாளான நேற்று இலவச தரிசன டிக்கெட் மற்றும் பல்வேறு சேவை டிக்கெட்களை பெற்ற 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 13 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு வராததால் தள்ளு முள்ளு இன்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்றைய தினம் 69,414 பேர் தரிசனம் செய்தனர். 18,612 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
நேற்று நாடு முழுவதிலிருந்து ஏராளமான முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்ததால், முன்பு எப்போதும் இல்லாத வகையில் திருப்பதி வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. இதற்கு முன்பு ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.6.18 கோடி உண்டியல் வசூலாகியிருந்தது. இந்த நிலையில் நேற்றைய உண்டியல் காணிக்கை வசூல் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.
திருமலையில் அருள்பாலிக்கும் சீனிவாச பெருமாள் தனது திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும் அந்த கடனுக்காக கலியுகம் முடியும் வரை வட்டி கட்டுகிறார் என்றும் புராண கதைகள் கூறப்படுகின்றன. பெருமாளுக்காக பக்தர்கள் தினசரியும் தங்களின் வேண்டுதல் நிறைவேற காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இன்றைய தினம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. சக்கரத்தாழ்வாருக்கு வராக மூர்த்தி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியின் போது குளத்தின் நான்கு புறமும் காத்திருந்த பக்தர்கள் புனித நீராடினர்.
இன்னும் 9 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகை தருவார்கள். இந்த மாதம் உண்டியல் காணிக்கை 150 கோடி ரூபாய்க்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளதாக தேவஸ்தான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.