ஏழுமலையானுக்கு உண்டியல் காணிக்கை கோடிக்கணக்கில் செலுத்திய பக்தர்கள்.. எத்தனை கோடி தெரியுமா?
திருப்பதி: ஏழுமலையானுக்கு பக்தர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
2022-23 நிதி ஆண்டில் ஏழுமலையானின் உண்டியல் காணிக்கை வருமானம் ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. கடந்த 10 மாதத்தில் 1192 கோடியே 81 லட்ச ரூபாய் காணிக்கை வருமானம் கிடைத்துள்ளது.
உலகத்திலேயே பணக்கார கோவில் என புகழப்படுவது திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில். நாடு முழுவதிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
நாட்டின் முக்கிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு ஆலயம் கட்டப்பட்டிருந்தாலும் திருப்பதிக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
கொரோனா காலத்தில் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்த முடியாத பணத்தை எல்லாம் தற்போது உண்டியல் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர் பக்தர்கள். இந்த வருமானம் அனைத்தும், ஏழுமலையான், தன் திருமணத்தின் போது, குபேரனிடம் பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக, பக்தர்களால் நம்பப்படுகிறது
ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை! மாஜி ஏடிஎஸ்பி அனுசுயாவுக்கு மிரட்டல்? நாராயணன் திருப்பதி பகீர்!
உண்டியல் காணிக்கை
ஜனவரி மாதம் 79 கோடியே 39 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பிப்ரவரி மாதம் 79 கோடியே 34 லட்ச ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். மார்ச் மாதம் 128 கோடியே 60 லட்சம் ரூபாயும் ஏப்ரல் மாதம் 126 கோடியே 65 லட்ச ரூபாயும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மே மாதம் 130 கோடியே 29 லட்ச ரூபாயும் ஜூன் மாதம் 123 கோடியே 76 லட்ச ரூபாயும் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
1193 கோடி உண்டியல் வருமானம்
ஜூலை மாதம் 139 கோடியே 75 லட்ச ரூபாயும் ஆகஸ்ட் மாதம் 140 கோடியே 34 லட்ச ரூபாயும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். செப்டம்பர் மாதம் 122 கோடியே 19 லட்ச ரூபாயும் காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 122 கோடியே 80 லட்சம் ரூபாயை பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். இதன் மூலம் கடந்த 10 மாதங்களில் மட்டும் 1193 கோடியை 11 லட்சம் ரூபாய் காணிக்கை வருமானமாக ஏழுமலையானுக்கு கிடைத்துள்ளது.
ஏழுமலையான் கோவில் சொத்து மதிப்பு
சமீபத்தில் திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது," திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு ரூ. 2.26 லட்சம் கோடி. கடந்த 2019 ஆம் ஆண்டு தேவஸ்தானம் சார்பில் தேசியமயமாக்கப்பட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.13,025 கோடி நிரந்தர வைப்புநிதியாக (Deposit) வைக்கப்பட்டது. தற்போது அசல் மற்றும் வட்டியை சேர்த்து ரூ.15,938 கோடியாக உள்ளது.
தங்கம் வங்கியில் இருப்பு
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் திருமலை திருப்பதி கோவிலில் முதலீடு ரூ.2,900 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு பல்வேறு வங்கிகளில் 7339.74 டன் தங்கம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 2.9 டன் தங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக ரூ.5,300 கோடி மதிப்பில் 10.3 டன் தங்கம் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. அதே போல் ரொக்கமாக ரூ.15, 938 கோடி உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் 7,123 ஏக்கரில் 960 சொத்துகள் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2231 ஏக்கர் விவசாய நிலங்கள்
திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு 2231 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளிட்ட தோட்டம், வீடுகள், அணை, புஷ்கரிணி, விவசாயம் அல்லாத நிலங்கள் ஆகியவை உள்ளன. ஏப்ரல் மாதம் முதல் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.700 கோடியை தாண்டி உள்ளது. கடந்த 5 மாதங்களாக உண்டியல் மூலம் மாதந்தோறும் கிடைக்கும் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஏழுமலையான் கோவில் சொத்துக்கள்
கோவில் அறக்கட்டளைவின் கட்டுப்பாட்டில் 7123 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் உள்ளதாகவும், இவைகள் 1974 ம் ஆண்டு முதல் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், இவற்றில் 113 சொத்துக்களை பல்வேறு காரணங்களால் அரசு, கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி விட்டதாகவும். 2014 ம் ஆண்டிற்கு பிறகு எந்த சொத்தும் நீக்கப்படவில்லை என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருவதாக சொல்லப்படுவதால் உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானமும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாக்கள், விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருவதால் இனி வரும் நாட்களிலும் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.