ஆருத்ரா தரிசனம்.. தீராத நோய் தீர்க்கும் திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் சந்தனம்
ராமநாதபுரம்: ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை ஆலயத்தில் உள்ள மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இளநீர் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு 11 மணி அளவில் மீண்டும் ஆருத்ரா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகின்றது. அபிஷேகம் முடிந்து 6ஆம் தேதி அன்று காலை சூரிய உதய நேரத்தில் நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. 6ஆம்தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.
மாவட்டம் திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். இந்த கோவில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையான கோவிலாகும். இங்குள்ள மரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்பது நம்பிக்கை!

உத்தரகோச மங்கை எனும் தலம், சிதம்பரத்துக்கு அடுத்து நடராஜர் திருத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. புராணமும் புராதனமும் பின்னிப் பிணைந்த அற்புதமான இந்தத் தலம் குறித்து ஏராளமான தகவல்கள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.
உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் சிவனார் ஏராளமான திருவிளையாடல் புராணங்களை நிகழ்த்தினார். திருவிளையாடல் புராணத்தில் வரும் 'வலை வீசி மீன் பிடித்த படலம்' இந்தத் தலத்தில்தான் நடந்தது என்று வரலாற்று ஆய்வாளும் தெரிவிக்கின்றனர்.
உத்தரகோச மங்கை கோயிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது. இந்த தலம் சிவபுரம், தட்சிண கயிலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா க்ஷேத்திரம் பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பத்ரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என பல பெயர்களில் அழைக்கப்பட்டு உள்ளது என்றும் அதற்கான கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் இந்தப் பெயர்களைக் கொண்டே அழைக்கப்படுகின்றன என்றும் சொல்கிறார்கள்.
மூலவருக்கு மங்களநாதர் எனும் திருநாமம். மங்களேஸ்வரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள், மங்களேஸ்வரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி என அழைக்கப்படுகிறாள்.
ஸ்ரீமங்களேஸ்வரியைப் போற்றும் வகையில் வ.த. சுப்ரமணியம் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901ஆம் ஆண்டு வெளியான அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.
ஸ்ரீராமர் வழிபட்ட ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில் உள்ளது. ராவணனைக் கொன்ற தோஷத்தில் இருந்தும் பாவத்தில் இருந்தும் விமோசனம் பெறுவதற்காக, ராமேஸ்வரத்தில் வழிபட்டார் என்கிறது அந்த ஆலயத்தின் தல புராணம். இங்கே, உத்தரகோசமங்கையில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இந்தத் தலம் ராமாயண காலத்தைய கல்வெட்டு என கருதப்படுகிறது.
இந்தத் தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர். சிதம்பரத்தைப் போலவே இங்கேயும் நடராஜர் பெருமான்தான் விசேஷம். இங்கே உள்ள பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார். இந்த விக்கிரகத் திருமேனியையும் கல்வெட்டுக் குறிப்புகளையும் பார்க்கும் போது, நடராஜர் சிலையும் தொன்மையானது எனப் புலப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

கோயில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர் என்பது வித்தியாசமான அமைப்பாக விளங்குகிறது. அதேபோல், முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று ஆதி சிதம்பர மகாத்மியம்' எனும் புராதனமான நூல் விவரிப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்!
சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் 'இலவந்திகைப் பள்ளி' என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது அற்புதம். மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்பு கொண்ட தலம் எனும் பெருமையும் உத்தரகோசமங்கைக்கு உண்டு. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று சிவனார் போற்றப்படுகிறார் என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தலத்தில் சுவாமியை அம்பாள் தினந்தோறும் பூஜை செய்வதாக ஐதீகம்! சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரைக்கு வந்ததாக மதுரைப் புராணம் தெரிவிக்கிறது.
பொதுவாக, தாழம்பூவை பூஜைக்குச் சேர்க்கமாட்டார்கள். ஆனால் இங்கே, பிரதோஷத்தன்று தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்த கோயிலில் சிவனாருக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை சார்த்தி வணங்கினால், தோஷங்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். தடைப்பட்ட திருமணமும் கைகூடி வருமாம்.
இங்கு ஆதிகாலத்து வராகி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் வராஹியை வழிபட்டால், தீராத பிரச்னைகள், திருமணத்தடை போன்றவை விலகும்! ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வராஹி வழிபாடு இங்கே இருந்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இங்கு ஞான உபதேசம் பெற்றனர் என்கிறார்கள்.
இங்கே, ஸ்ரீமங்களநாதர் சன்னதி, மங்களேஸ்வரி சன்னதி, மரகதக்கல் நடராஜர் சன்னதி, சகஸ்ரலிங்க சன்னதி நான்கும் தனித்தனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்துமே மிக நேர்த்தியான கட்டுமானத்துடனும் சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
காரைக்கால் அம்மையாரும் இங்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார். உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது என்கிறார்கள். இங்கே வருடந்தோறும் சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்ஸவம், ஆனி மாதம் பத்துநாள் விழா, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை விழா மாசி மகாசிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள். இந்த விழாக்கள் குறைவின்றி நிகழவேண்டும் என அந்தக் காலத்தில் நிவந்தங்களும் நிதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும். இந்த நிலையில் திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது கடந்த 28ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை வியாழக்கிழமை காலை 8 மணி அளவில் மரகத நடராஜர் சன்னதியானது திறக்கப்படுகின்றது. தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனங்கள் முழுவதுமாக களையப்படுகிறது. பின்னர் நடராஜருக்கு பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இளநீர் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு 11 மணி அளவில் மீண்டும் ஆருத்ரா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகின்றது. அபிஷேகம் முடிந்து 6ஆம் தேதி அன்று காலை சூரிய உதய நேரத்தில் நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. 6ஆம்தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.
நாளைய தினம் 6ஆம் தேதி காலையிலிருந்து 6ஆம் தேதி மாலை வரையிலும் மட்டும் மரகத நடராஜர் சன்னதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை கோவிலில் நாளை பகல் மற்றும் இரவு முழுவதும் சென்னை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜராஜேஸ்வரி நாச்சியார் ஆகியோர் மேற்பார்வையில் திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். அதுபோல் நாளை மறுநாள் திரு உத்தரகோசமங்கை கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்காக மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 1 நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதியானது பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications