மீனாவிடம் சில்மிஷம் செய்தவரை தூக்கி பந்தாடி, நடிகையை உயிரோடு மீட்டவர் அந்த பிரபல நடிகர்: உருகிய சிவா
சென்னை: கேப்டனை போல ஒரு துணிச்சல் நபரை நான் எங்குமே பார்த்ததில்லை.. எந்த விஷயத்தை எடுத்தாலும், அந்த இடத்தில் அவர் கேப்டன் ஆகிவிடுவார் என்று உணர்ச்சிப்பெருக்குடன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் சிவா.
IndiaGlitz Tamil யூடியுப் சேனலுக்கு தயாரிப்பாளர் சிவா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் விஜயகாந்த் குறித்து பல்வேறு தகவல்களை நெகிழ்ந்து, மிக உருக்கமாக பேசியிருக்கிறார்.. அதில் விஜயகாந்தின் பல்வேறு குணாதிசயங்களை பேசியவர், அவரது துணிச்சல், தனித்தன்மை பற்றியும் கூறியிருக்கிறார்..

இதுகுறித்து ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து சிவா சொல்லும்போது, "படத்தில் மட்டும் அவர் கேப்டன் இல்லை.. எந்த விஷயத்தை எடுத்தாலும், அந்த இடத்தில் அவர் கேப்டன் ஆகிவிடுவார். சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தை எடுத்துக் கொண்டால், அங்கேயும் கேப்டன்தான் நின்றார்.. ஒரு தனி மனிதராக நின்றுதான் அந்த ஊர்வலத்தை அவர் நடத்தினார் என்று சொல்வேன்..
அதுமாதிரி யாருமே செய்ய முடியாது. நடிகர் சங்கத்துக்காக அவர் இறங்கி செய்த வேலைகளும், வலிகளும், பட்ட அவமானங்களும், நடத்திய போராட்டங்களும் சாதாரணமானவை கிடையாது. வெறுமனே ஸ்டார் நைட் நடத்தி, எல்லாரும் டான்ஸ் ஆடி சம்பாதித்த பணம் கிடையாது. கேப்டன் ஒவ்வொருவரிடம் உட்கார்ந்து வசூல் செய்த காசு அது. அந்த தலைமை பண்பெல்லாம் யாரிடமும் கிடையாது.
நடிகை மீனா: நடிகை மீனா மலேசியாவிலிருந்து அன்று உயிரோடு வந்ததற்கு காரணமே விஜயகாந்த் சார்தான்.. ஒருமுறை, மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்கிறோம். அப்போது ஓட்டல் வாசலில் 1000 பேர் கூடி நிற்கிறார்கள்.. பெரிய போலீஸ் பாதுகாப்பு இல்லை.. போலீஸ் பாதுகாப்பும் எங்களுக்கு தரவில்லை.. இதனால் ரசிகர்கள் கூட்டம் சேர்ந்து, பயங்கர தள்ளுமுள்ளாகிவிட்டது.
அப்போது உதவிக்கு யாரும் இல்லாததால், கேப்டன், நெப்போலியன் சார், சரத்குமார் சார் மூன்று பேரும் சேர்ந்து நடிகைகளின் பெரிய பெரிய பெட்டிகளை எடுத்து, பஸ்ஸில் ஏற்றுகிறார்கள்..
மோசமான செயல்: அந்த நேரம்பார்த்து, யாரோ ஒரு நபர் ஹெல்மெட் அணிந்தவாறு மீனாவிடம் நெருங்கி வந்து தவறாக நடக்க முயன்றார்.. கூட்ட நெரிசலில் யாரையுமே கன்ட்ரோல் செய்ய முடியாத நிலையில், மீனாவிடம் மிகவும் மோசமாக அந்த நபர் நடந்து கொள்ள முயன்றார்.. எங்களால் அந்த கூட்டத்தில் எதுவுமே செய்ய முடியவில்லை. சுற்றிலும் என்ன நடக்கிறது என்றுகூட புரியாமல் தவித்தோம்.
அப்போது மீனாவிடம் சில்மிஷம் செய்ய வந்த நபரை கவனித்துவிட்ட கேப்டன், ஆவேசமாக ஓடிவந்து, ஹெல்மெட்டுடன் அலேக்காக மேலே தூக்கி அவரை வீசினார்.. அந்த நபரின் ஹெல்மெட்டை கழட்டி மண்டையிலேயே ஓங்கி அடித்தார். அப்படியே ரத்தம் பொலபொலவென கொட்டி வழிந்தது.. அந்த ரத்தத்தை பார்த்துமே, தள்ளுமுள்ளு செய்து கொண்டிருந்த அத்தனை பேரும் பயந்து தெறித்து ஓடிவிட்டார்கள்..
பாதுகாப்பு: இதற்கு பிறகே நடிகைகளை அந்த வாகனத்தில் பத்திரமாக ஏற்றி அழைத்து வர முடிந்தது.. கேப்டன் அந்த நபரை தாக்கியதை பார்ப்பதற்கு, அப்படியே சினிமா ஷாட் மாதிரியே இருந்தது. அந்த நபரை தூக்கி அடித்தார்.. ரியல் ஆக்ஷனில் இறங்கிடுவார் கேப்டன். அதுபோல ஒருநபரை நான் பார்த்ததே கிடையாது" என்று பிரம்மிப்புடன் சொல்கிறார் தயாரிப்பாளர் சிவா.












Click it and Unblock the Notifications