கடவுளே.. என்னை காப்பாத்து.. என்னாச்சு இந்த குட்டீஸ்களுக்கு?
சென்னை: சன் டிவியின் குட்டிச்சுட்டீஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 5 வயதிற்குள்ளான சிறு பாலகன், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோவை சரளா எதாவது பேசினால், அதைக் கிண்டல் செய்வது போல, கடவுளே இவங்ககிட்டே இருந்து என்னை காப்பாத்துன்னு சொல்றது கடந்த வார நிகழ்ச்சியின் ஹைலைட் எபிசோடாக இருந்தது.
சிறுவன் மேலே கையை நீட்டி, அங்குதான் கடவுள் இருக்கிறார் என்பது போல நினைத்து தனது முகத்தையும் மேல்நோக்கியவாறு, கடவுளே என்னை காப்பாற்று என்று விளையாட்டாக அடிக்கடி சொன்னான்.
இந்த குழந்தைக்கு மெச்சூரிட்டி என்றால் வேற லெவலில் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அரைமணி நேர ஷோவையும் கலகலப்பாக மாற்றினான் இந்த பிஞ்சு. பல நல்ல விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறான் இவன்.
கோவை சரளா தோளில்
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோவை சரளா சிறுவனிடம் வெகு வாஞ்சையாக பேச, அவன் கோவை சரளா தோள்மீது கைப் போட்டுக்கொண்டான்.என்னடா நீ தோளில் எல்லாம் கைப்போட்டுக்கிட்டே என்று கோவை சரளா கேட்க, நம்ம ஃபிரண்டாயிட்டோம்னா இப்படித்தான் தோளில் கைபோட்டு பேசணும் என்று அசால்ட்டாக கூறினான்.
கூட்டு குடும்பம் நல்லது
கூட்டு குடும்பம் நல்லதா, தணிக் குடித்தனம் நல்லதா என்று கேட்டபோது, கூட்டு குடும்பம்தான் நல்லது என்று சொன்னான். என்ன நன்மை என்று கேட்டபோது கூட்டு குடும்பத்தில் நாம் ஒற்றுமையாக இருந்தால், யாராலும் நம்மை ஒண்ணும் செய்ய முடியாது என்று சிறுவன் சொன்னான்.யார் யார் இருந்தா கூட்டுக்குடும்பம் என்று கேட்டபோது, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, சித்தி சித்தப்பா, தங்கச்சி எல்லாம் இருந்தா கூட்டுக்குடும்பம என்று சொன்னான்.
ஆலும் வேலும் பல்லுக்கு
கேட்காமலே ஆல மரத்துக் குச்சியும் வேப்ப மரத்துக் குச்சியும் எடுத்து அதுல பல் தேய்ச்சா பல்லு உறுதியா, சுத்தமா இருக்கும். அந்த காலத்துல அதுலதான் எல்லாரும் பல்லு தேய்ச்சாங்க. அதனாலதான் அவங்க பல்லு ஸ்ட்ராங்க, சுத்தமா இருந்துச்சு என்று சொன்னான். உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு கேட்டபோது, நான் தேச்சு இருக்கேன். படிச்சு இருக்கேன்னு வேற பெரிய மனுஷன் மாதிரி சொன்னான்.
பாசம் இங்கேயிருந்து
இன்னொரு குழந்தை பாசம் கடையில கிடைக்கும் என்பது போல சொல்ல, இதற்கும் முதல் சிறுவன் இடையில் புகுந்து பாசம் இங்கேயிருந்து வரும் என்று தனது ஹார்ட்டை காண்பித்தான். பக்கத்து குழந்தை நயன்தாரா மாதிரி அழகா இருக்கிறது என்றபோதும், கடவுளே என்னை காப்பாத்து என்று அதே டயலாக்கையே பேசி நிறைய கைத்தட்டல் வாங்கினான்.
நேற்றைய நிகழ்ச்சி
கோவை சரளா பொங்கல் நிகழ்ச்சியை நடத்தும்போதும், தலையில துணி போட்டு இருக்காங்களே அவங்க யாரு என்று , இவங்களும் தலையில் துணி போட்டு இருக்காங்க இவங்க யாரு என்று கேள்வி கேட்டார். அப்போது ஒரு சிறுவன் அவங்க முஸ்லீம், இவங்க கிறிஸ்ட்டியன் என்று சரியாக சொன்னான்.இப்போதும் முஸ்லீம் கும்பிடும் சாமி எது, கிறிஸ்டியன் கும்பிடும் சாமி எது, இந்து கும்பிடும் சாமி எது என்று கேட்டார். மூன்றுக்கும் சரியான பதில் சொல்லி எப்படி வழிபடுவார்கள் என்று கூட நடித்து காண்பித்தான்.
ஆனாலும் இந்த கேள்விகள் குழந்தைகள் நிகழ்ச்சிக்குத் தேவையானதுதானா என்பதுதான் கொஞ்சம் இடிக்குது.