மிருகங்களை விடவா கேவலமா ஆகிவிட்டது மனித உயிர்கள்.. கதறி அழுத ஜனனி!
சென்னை: சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக பேசியுள்ள சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் கதறி அழுதுள்ளார்.
சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்கியதில் தந்தை மகன் என இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். கொஞ்ச நாட்களாக நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் இந்த சாத்தாங்குளம் பிரச்சினைக்கு பல வேறுபட்டவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தினால் தூத்துக்குடி மாவட்டம் கொதிப்பில் இருந்து வருகிறது. இதற்கு நியாயம் வேண்டுமென்று நாடு முழுவதுமே பல பிரபலங்கள் அரசியல்வாதிகள் நடிகர் நடிகைகள் கிரிக்கெட் பிரபலங்கள் என எல்லாரும் தங்களுடைய எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். பல்வேறு இடங்களில் இதற்காக போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

கண்ணீர் விட்ட ஜனனி
தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் எல்லைத் தகராறு தண்ணீர் தகராறு என்று ஏகப்பட்ட இருந்தாலும் கூட சாத்தான்குளம் பிரச்சனைக்காக அவர்களும் அங்கு போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை ஜனனி தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

வலியும் கோபமும்
அந்த வீடியோவை பார்க்கும் போதே அவருடைய வலி, கோபம், தவிப்பு எல்லாமே அதில் தெரிகிறது .அதில் அவர் நான் கொஞ்ச நாட்களாகவே டிவி பார்ப்பது கிடையாது. எப்பவாவது தான் சமூக வலைதளங்களும். ரொம்ப நாளுக்கு அப்புறம் இன்னைக்குதான் நான் என்னோட இணைய தளத்தை ஓபன் பண்ணுனேன். அதில் சாத்தான்குளம் பிரச்சனையை பார்த்ததும் எனக்கு ஜிவ்வென்று ஆகிவிட்டது. என்னை அறியாமல் நான் கதறி அழுதுவிட்டேன்.

அழுகை நிற்கல
இந்த செய்தியை கேட்டு என்னால் அழுகையை நிப்பாட்ட முடியவில்லை. ஒரு மிருகத்தை விட மனிதர்கள் கேவலமானவர்கள். ஒரு மிருகம் தான் இன்னொரு மிருகத்தை வேட்டையாடும். ஆனா ஒரு மனிதன் எப்படி இன்னொரு மனிதனை கொல்ல முடியும். ஐந்தறிவு உள்ள ஜீவன்கள் தான் மிருகங்கள் ,ஆனால் ஆறறிவு எதற்காக இந்த மனிதருக்கு கடவுள் கொடுத்திருக்கிறார்.

எனது வீட்டிலும் நடந்தது
நான் இந்த அளவுக்கு வேதனைப்பட்டு அழுவதற்கு என்னுடைய வாழ்க்கையிலும் இதே போல ஒரு சோகம் நடந்திருக்கிறது. போலீஸ்காரர்களால் தான் என் அண்ணன் இறந்துவிட்டார். நாங்களும் அதே நேரத்தில் தெருவில் தான் நின்றோம் அண்ணனை இழந்து. எனக்கு அப்போ சின்ன வயசு. நான் குழந்தையாக இருந்ததால் என்ன பண்ணனும்னு தெரியல. இதே நிலைமை இன்னைக்கு என்ன போல ஒரு குடும்பத்திற்கு வந்திருக்கும் போது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

கருப்பினத்தவருக்கு நேர்ந்த கதி
அமெரிக்காவில் ஒரு கருப்பினத்தவர்க்கு போலீசாரால் மரணம் ஏற்பட்டது. நாடு முழுக்க அவருக்கு குரல் கொடுத்தோம். அதே சம்பவம் இரட்டைக்கொலை நம்ம தமிழ்நாட்டில் நடந்து இருக்கு. இதை நாம் எளிதாக விட்டுவிட கூடாது. இது போல் ஒரு சம்பவம் இனியும் நடக்கக்கூடாது. இதற்கு நாம் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். எல்லோரும் இணைந்து இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்தால் மட்டும் தான் இதற்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று மிகுந்த வேதனையுடன் கூறியிருக்கிறார் ஜனனி.












Click it and Unblock the Notifications