வயசானாலும் ஸ்டைலும் அழகும்.. இஸ்ரோவின் வின்டேஜ் ராக்கெட் தெரியுமா? 200வது முறையாக பறந்து சாதனை
திருவனந்தபுரம்: இந்தியாவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி உள்ளிட்ட ராக்கெட்டுகளுக்கு முன்னோடியான 'RH-200' எனும் ராக்கெட் நேற்று 200வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளித்துறையில் தொடக்கத்தில் இந்த வகை ராக்கெட்டுகள்தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தின. பின்னர் வந்தவைதான் மேற்குறிப்பிட்ட பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.. ஆஸ்திரேலியா போட்ட கோடு.. ரோடு போடும் இந்தியா.. சர்வதேச அளவில் மாஸ்!
இஸ்ரோ
இந்தியா விண்வெளித் துறையில் காலடி எடுத்து வைத்த காலம் மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது மிக தாமதமாகதான் இருந்தது. ஆனால் தற்போது இஸ்ரோவின் வளர்ச்சி உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இவற்றிற்கெல்லாம் தொடக்கமாக இருந்தது இந்த RH வகை ராக்கெட்டுகள்தான். சர்வதேச விண்வெளி விதிகளை பொறுத்த அளவில் விண்வெளி என்பது பூமியிலிருந்து 100கி.மீ தொலைவை கடந்தால்தால்தான் தொடங்கும். ஆனால் 1960களில் இந்தியா இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. மாறாக திட எரிபொருளை கொண்டு 100கி.மீக்குள் பயணிக்கும் எளிமையான ராக்கெட்டுகளை விண்ணில் ஏவியது.
இறக்குமதி
இதனை ஏவுவதற்கு தனியான எந்த சிறப்பு வசதிகளும் தேவையில்லை. குறைந்த அளவில் ஆட்கள் இருந்தாலே இதனை ஏவிவிடலாம். கையாள்வதற்கு மிக எளிமையானது. அந்த வகையில் இந்தியாவிலிருந்து 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி இந்த வகை ராக்கெட்டு விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் இது இந்திய தயாரிப்பு கிடையாது. அமெரிக்க தயாரிப்பு ராக்கெட். இதனையடுத்து ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ராக்கெட்டுகளில் தங்களது செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியது.
RH வகை ராக்கெட்டுகள்
இப்படியே போய்க்கொண்டிருக்கையில் இந்தியா முதன் முறையாக 1967ம் ஆண்டில் தனது முதல் RH வகை ராக்கெட்டை விண்ணில் ஏவியது. முதலில் RH-75 பின்னர் RH-100 இதனையடுத்து RH-125 என உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரிக்கப்பட்டு அதில் சிறிய வகையான செயற்கைக்கோள்கள் வைக்கப்பட்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டன. தற்போது இந்தியா வசம், RH-200, RH-300-Mk-II மற்றும் RH-560-Mk-III ஆகிய ராக்கெட்டுகள் இருக்கின்றன. இவைகள் 100 கி.கி எடையை சுமந்துகொண்டு 75-550 கி.மீ உயரம் வரை பயணம் செய்யும் திறன் கொண்டவை.
RH-200
அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி RH-200 வகை ராக்கெட் 100வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனையடுத்து நேற்று (நவ.24) இந்த ராக்கெட் 200வது முறையாக 'தும்பா' ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வகை ராக்கெட் 100கி.மீ உயரத்திற்குள்தான் பயணிக்கும். இதில் வைத்து அனுப்பப்படும் சிறிய வகை கருவிகள் வானிலை, வளிமண்டலம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பங்கேற்றிருந்தார். அதேபோல இதில் இந்த ராக்கெட் குறித்து புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.