சுற்றுலா துயரம்: கோவையில் இருந்து சென்ற கேரளா அரசு பேருந்து மீது பள்ளி பேருந்து மோதி 9 பேர் பலி!
பாலக்காடு: கேரளாவில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வந்த போது பாலக்காடு அருகே பள்ளி பேருந்து விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கேரளாவின் எர்ணணாகுளம் பகுதி முலந்துருத்தி Baselious School பள்ளியின் 10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் 42 பேருடன் பள்ளி பேருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணமாக சென்று கொண்டிருந்தது. இவர்களில் 26 பேர் மாணவர்கள்; 16 பேர் மாணவிகள்.

அப்போது வடக்கஞ்சேரி என்ற இடத்தில் தமிழகத்தின் கோவையில் இருந்து கேரளாவின் கோட்டாரக்கர நோக்கி கேரளா அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கேரளா அரசு பேருந்தை முந்தும் வகையில் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் வேகமாக இயக்கி உள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் பள்ளிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக அரசு பேருந்து மீது பயங்கர சப்தத்துடன் மோதியது.
இந்த கோர விபத்தில் பேருந்து பயணிகள் 2 பேர், பள்ளி மாணவர்கள், பணியாளர்கள் என மொத்தம் 7 பேர் சமபவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 16 பேர் பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள், ஆலத்தூர், பாலக்காடு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக கேரளா அரசு பேருந்து ஓட்டுநர் சுமேஷ் கூறுகையில், பள்ளிக்கூட பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிவேகமாக வந்தார். அவரால் பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பேருந்து மீது மோதியது என்றார். அப்பகுதியில் மீட்பு பணிகள் உள்ளூர் பொதுமக்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன.
இச்சம்பவம் குறித்து பெற்றோர் கூறுகையில், பள்ளி பேருந்து ஓட்டுநர் வேளாங்கன்னி சுற்றுலாவுக்கு சென்றுவிட்டு அசதியாக இருந்துள்ளார். அவரையே நீலகிரிக்கும் சுற்றுலா செல்ல பள்ளி நிர்வாகம் அனுப்பி வைத்தது. இதுதான் விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டி உள்ளனர். இவ்விபத்து கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் கூறுகையில், எங்கள் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் 80-90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தார். இவ்வளவு வேகமாக எதுக்கு போகனும்? என நாங்கள் கேட்டோம். ஆனால் ஓட்டுநருடன் வந்த நபர், அனுபவம் மிக்கவர், சமாளித்துவிடுவார் என சொன்னார். இப்போது இவ்வளவு பெரிய துயரம் நிகழ்ந்துவிட்டது என வேதனை தெரிவித்தார். ஜிபிஎஸ் பதிவுகளும், பள்ளி பேருந்து அதிவேகமாக சென்றதாகவே உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications