என்ன இது? சான்டா கிளாஸ் பிரதமர் மாதிரி இருக்கு? கொச்சி கார்னிவல் விழாவை ரத்து பண்ணுங்க! பாயும் பாஜக
திருவனந்தபுரம்: கேரளாவின் கொச்சி நகரத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் கார்னிவல் திருவிழாவில் சான்டா கிளாஸை போன்ற உருவ பொம்மை ஒன்று எரிக்கப்படுவது வழக்கம். இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு எரிக்கப்பட உள்ள பொம்மை பிரதமர் மோடியின் உருவத்தை ஒத்திருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் ஆங்கிலேயர்களின் கலாச்சார ஆதிக்கம் அதிகம் இருந்தாலும், கேரளாவை பொறுத்த வரை குறிப்பாக கொச்சி நகரத்தை பொறுத்த வரை இங்கு போர்த்துக்கீசியர்கள் கலாச்சாரம் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் அடையாளமாக ஆண்டு தோறும் கார்னிவல் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழா போர்த்துக்கீசியர்களின் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. அதாவது புத்தாண்டை வரவேற்க பல்வேறு விழாக்கள் டிசம்பர் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் நடத்தப்படும்.
தீ பிடித்து எரிந்த கார்.. தலையில் காயத்துடன் ஓடிய பண்ட்.. விபத்து எப்படி நடந்தது? பரபர பின்னணி
அப்படி தொடங்கியதுதான் இந்த 'கொச்சி கார்னிவல்'. 1503ம் ஆண்டு முதல் 1663ம் ஆண்டு வரை போர்த்துக்கீசியர்கள் இந்த திருவிழாக்களை நடத்தினர். அதன் பின்னர் இந்த திருவிழா கைவிடப்பட்டது. ஆனால், 1984ம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது. டிசம்பர் மாத்தின் கடைசி இரண்டு வாரங்களில் உணவு திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவை நடைபெறும்.
புகார்
அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த திருவிழா வாஸ்கோடகாமா சதுக்கத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கண்காட்சிகள், விளையாட்டுகள், நடனப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்புகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 25ம் தேதி தொடங்கிய இந்த திருவிழா ஜனவரி 1ம் தேதியுடன் நிறைவடைகிறது. நிறைவடையும் நாளில் சான்டா கிளாஸ் உருவத்தை போன்றிருக்கும் ஒரு முதியவரின் உருவ பொம்மை எரிக்கப்படும். இது 'பாப்பான்ஜி' உருவம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு எரிக்கப்படும் இந்த பாப்பான்ஜி உருவ பொம்மையானது பிரதமர் மோடியின் உருவத்தை ஒத்திருப்பதாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்
போராட்டம்
60 அடி உயரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பொம்மையின் முகம் மட்டும் பிரதமரின் முக ஜாடையை போன்று இருப்பதாகவும் எனவே இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாஜகவினர் பரேட் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாஜகவினரை அப்புறப்படுத்தியுள்ளனர். இது குறித்து எர்ணாகுளம் பாஜக மாவட்டத் தலைவர் கே.எஸ்.ஷைஜு கூறுகையில், "புத்தாண்டு இரவு அன்று இந்த பொம்மை எரிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் பொம்மையின் முகம் பிரதமர் மோடியின் முகத்தை போன்று இருக்கிறது.
நடவடிக்கை
இது தொடர்பாக காவல் நிலையத்திலும் நாங்கள் புகார் அளித்திருக்கிறோம். இது நாட்டின் பிரதமரை அவமதிக்கும் முயற்சி. புகாரையடுத்து இந்த பொம்மையின் உருவத்தை மாற்றுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்திருக்கின்றனர். ஆனால் இது போதாது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சாதி, மதம், அரசியல் கலந்து மேற்கொள்ளப்படும் விழா. இதில் இந்திய பிரதமரை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் உருவ பொம்மையை வடிவமைத்திருப்பது என்பது கொச்சியையும் கேரள மக்களையும் அவமானம் படுத்தும் செயல்" என்று கூறியுள்ளார்.
விளக்கம்
இது குறித்து விழா ஏற்பாட்டாளரும் கொச்சி மேயருமான கே ஜே சோஹன் கூறுகையில், "பாஜகவினரின் இந்த எதிர்ப்பு தேவையற்றது. ஏனெனில் பாப்பான்ஜியின் உருவத்தில் முகம் மட்டுமே பிரதமரின் உருவத்தை ஒத்து இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் இந்த பாப்பான்ஜியின் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. இது முழுமையடைந்த பின்னர் பார்த்தால் உருவம் வேறு மாதிரியாக இருக்கும். இது குறித்து ஏற்கெனவே அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் அவர்கள் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகின்றனர்.