அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்ட விமானத்தில்.. நடுவானில் ஏற்பட்ட தீ! மீண்டும் தரையிறக்கம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நடுவானில் என்ஜினில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்: கோழிக்கோடு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நடுவானில் என்ஜினில் தீப்பொறி கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் விமானத்துறைக்கு இது போதாத காலம் போல.. தொடர்ச்சியாக விமானங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வெளியாகும் தகவல்கள், விமான நிறுவனங்களுக்குப் பெரிய தலைவலியைக் கொடுப்பதாக உள்ளது.
கடந்த சில வாரங்களாகவே ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனிடையே ஏர் இந்தியா குறித்து மற்றொரு மோசமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
வாங்க..வாங்க..! சுற்றுலா பயணிகளை கவர 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகள்.. எந்த நாட்டில் தெரியுமா?
என்ஜினில் தீ
அபுதாபியில் இருந்து கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்ஜினில் தீப்பொறி கண்டறியப்பட்டது. இதையடுத்து மீண்டும் அது அபுதாபி விமான நிலையத்திலேயே தரையிறங்கியதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பைலட் உடனடியாக செயல்பட்டதால் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
பத்திரமாக தரையிரக்கம்
இந்தச் சம்பவம் நடந்த போது விமானத்தில் மொத்தம் 184 பயணிகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டு 1,000 அடி உயரத்தை எட்டிய போதே.. விமானத்தின் ஒரு என்ஜினில் தீப்பிடித்ததை விமானி கண்டறிந்துள்ளார். இதையடுத்து மீண்டும் அபுதாபி விமான நிலையத்திலேயே விமானம் தரையிறக்கப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் B737-800 என்ற விமானம் நடுவானில் தீப்பிடித்ததால் அபுதாபி விமான நிலையத்திற்குத் திரும்பியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன
இது குறித்து சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் புறப்பட்டுக் கொஞ்ச நேரத்திலேயே என்ஜினில் தீ ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் உடனடியாக மீண்டும் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது" என்றனர். திடீரென என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.. இது குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா
அதேநேரம் ஏர் இந்தியா விமானத்தில் இதுபோல நடப்பது இது முதல்முறை இல்லை.. ஏற்கனவே, கடந்த ஜனவரி 23ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் இருந்து மஸ்கட் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் புறப்பட்ட 45 நிமிடங்களில் மீண்டும் திருவனந்தபுரத்திலேயே தரையிறங்கியது. அதேபோல கடந்த டிசம்பர் 2022இல், துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஒரு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.
பாம்பு
கோழிக்கோட்டில் இருந்து துபாய் சென்ற அந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திட்டமிட்டபடி புறப்பட்டு துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பின்னரே விமானத்தில் பாம்பு இருந்ததை விமான ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாகவும் விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் மீதான நற்பெயரைக் கெடுக்கும் வகையிலேயே உள்ளது.
டாடா
ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசுக்குச் சொந்தமாக இருந்தது. இருப்பினும், தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் ஏர் இந்தியாவை விற்றுவிட முடிவு செய்தன. நீண்ட முயற்சிக்குப் பின்னர், ஏர் இந்தியா விமானம் டாடா குழுமத்திடம் விற்கப்பட்டது. டாடாவிடம் ஏற்கனவே விஸ்தாரா, ஏர் ஏசியா (இந்தியா) நிறுவனங்கள் உள்ள நிலையில், அவற்றை ஏர் இந்தியாவுடன் இணைக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக 1950களில் டாடாவிடம் இருந்து ஏர் இந்தியாவை மத்திய அரசு நாட்டுடைமையாக்கியது குறிப்பிடத்தக்கது.