யாராக இருந்தாலும்,அது ஆளும் தரப்பாக இருந்தாலும்.. சட்டத்திற்கு கீழ்தான்.. கேரள ஐகோர்ட் சம்மட்டி அடி
திருவனந்தபுரம்: சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை, அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று கடுமையான கருத்துகளைக் கேரள உயர் நீதிமன்றம் பதிவு செய்தது.
அண்டை மாநிலமான கேரளாவில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முறையான அனுமதி இன்றி சட்டவிரோதமாகக் கொடிக் கம்பங்கள் எதுவும் அமைக்கக்கூடாது என்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை
இருப்பினும், இதைக் கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீறியுள்ளதாக எதிர் தரப்பினர் நீதிபதிகளிடம் குறிப்பிட்டனர். இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த கேரளா உயர் நீதிமன்றம், சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை, அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று கடுமையான கருத்துகளைப் பதிவு செய்தது.

அப்பட்டமான அத்துமீறல்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தேவன் ராமச்சந்திரன் கூறுகையில்,"ஒருவர் எவ்வளவு உயர்ந்த நபராக இருந்தாலும், அவர் சட்டத்திற்கு கீழே தான். அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டங்களையும் அரசையும் புரிந்து கொண்டு பொறுப்புடன் இருக்க வேண்டும். சட்டத்துக்குப் புறம்பாக யார் கொடிகளை நடுகிறார்கள் என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. இங்கு ஆளும் தரப்பு செய்கிறது. இது அப்பட்டமான அத்துமீறல்.

இப்படிச் செய்யலாமா
இதைச் சாமானியர்களோ அல்லது ஆட்சியில் இல்லாதவர்களோ அல்லது எதிர்க்கட்சியில் இருப்பவர்களோ செய்தால் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே இப்படிச் செய்யலாமா? இப்படிக் கூறுவதற்காக என்னை ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் இணைக்கவும் குறிப்பிட்ட கட்சியின் முத்திரையைக் குத்தவும் சிலர் முயல்வது எனக்குத் தெரியும். ஆனால் இதுபோன்ற முயற்சிகளால் என்னையும் உயர் நீதிமன்றத்தையும் அச்சுறுத்த முடியாது" என்று தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர்கள்
அதேபோல மற்றொரு வழக்கில், குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாகக் கொடிகள் மற்றும் பேனர்களை அமைத்துள்ளதாகக் கூட்டுறவுச் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து ஆட்சியர்களையும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்குக் கூடுதல் அவகாசம் தேவை என்றும் கேரள அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

நடவடிக்கை தேவை
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தவறு செய்தவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்சி பேதமின்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் முதலே இந்த வழக்கில் கேரள ஐகோர்ட் பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications