ஒன்றாக அமர எதிர்ப்பு.. பஸ் நிறுத்த சீட்டை அகற்றிய கும்பல்! மடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் பதிலடி!
திருவனந்தபுரம்: கேரளாவில் மாணவ-மாணவிகள் அருகருகே அமர எதிர்ப்பு தெரிவித்து பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ-மாணவிகள் ஒருவரின் மடியில் இன்னொருவர் அமர்ந்து போட்டோ எடுத்து எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி(சிஇடி) உள்ளது. இந்த கல்லூரியின் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த மாணவ- மாணவிகள், பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடை மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த பஸ் நிறுத்த இருக்கையில் கல்லூரி மாணவ-மாணவிகள் சேர்ந்து இருப்பது வழக்கம். இதனை அங்கும் வசிக்கும் சிலர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

இருக்கைகள் சேதம்
இதனால் கடந்த 18ம் தேதி அங்கு வந்த மர்மநபர்கள் இருக்கையை சேதப்படுத்தினர். அதாவது இருக்கைகள் இடையே இடைவெளி ஏற்படுத்தும் வகையில் சில இருக்கைகள் அகற்றப்பட்டு இருந்தது. இதனை பார்த்த மாணவ-மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இணையதளத்தில் பரவும் போட்டோ
மேலும் மாணவ-மாணவிகள் நூதன முறையில் எதிர்ப்பை காட்டியுள்ளனர். அதாவது சேதப்படுத்தப்பட்ட இருக்கையில் மாணவ-மாணவிகள் ஒன்றாக அமர்ந்து போட்டோ எடுத்துள்ளனர். நட்பின் அடிப்படையில் மாணவரின் மடியில் மாணவிகள் அமர்ந்துள்ளனர். இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாலின வேறுபாடு இல்லை
இந்த படங்களை மாணவ-மாணவிகள் இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ‛‛நாங்கள் நண்பர்கள். எங்களின் நட்புக்கு பாலின வேறுபாடு இல்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் அருகில் உட்காருவதை நீங்கள் விரும்பவில்லை, ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் மடியில் உட்காரலாமா?'' என கேள்வி கேட்டுள்ளனர். இதுபற்றி கல்லூரி யூனியன் பிரதிநிதியான அங்கிதா ஜாசி கூறுகையில், ‛‛குடியிருப்பு சங்கம் சார்பில் இருக்கைகளில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இது சகிப்புத்தன்மையற்ற செயல்'' என்றார்.

மேயர் கூறுவது என்ன?
திருவனந்தபுரம் நகர மேயர் ஆர்யா எஸ் ராஜேந்திரன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து இருக்கை சேதப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛கேரளா முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலம். இங்கு இத்தகைய செயல் கண்டனத்துக்குரியது. இருபாலினத்தவர்கள் அருகருகே இருப்பதை கண்டிக்கும் நபர்கள் இருண்ட உலகத்தில் வாழ்கின்றனர் என நினைக்கிறேன். காலம் மாறிவிட்டது. இதுபோன்ற சம்பவங்களை சகித்து கொள்ள முடியாது'' என்றார்.












Click it and Unblock the Notifications