பாடி ஷேமிங் குற்றம்.. கல்வி நிலையங்களிலேயே முடிவுகட்ட திட்டமிடும் கேரளா! அரசின் அதிரடி அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரள கல்வி நிலையங்களில் 'Body Shaming' எனப்படும் உடலை வைத்து 'கேலி' செய்யும் முறைக்கு முடிவுகட்ட தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விழிப்புணர்வை பாட திட்டத்தில் ஓர் அங்கமாக மாற்றுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல முற்போக்கான நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற கேரள மாநிலம் தற்போது இதில் மேலும் ஒரு படி முன்னேறியுள்ளதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
தாயில்லாத கோழிகள்! சகோதரனாக மாறிய 'பாசக்கார' குட்டிக்குரங்கு.. இந்த வீடியோவை பாருங்க! நெகிழ்ச்சி
கேரளம்
ஒருவரின் உடலமைப்பை வைத்தும், நிறத்தை வைத்தும், பாலினத்தை வைத்தும் அவரை கேலி செய்வது பொது சமூகத்திலும், சினிமாக்களிலும் இயல்பான ஒன்றாக தற்போது வரை இருந்து வருகிறது. ஆனால் இந்த பழக்கத்தால் பலர் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான நோய்களுக்கு மன அழுத்தம்தான் காரணம் என்று மருத்துவ உலகம் கூறி வருவதிலிருந்து இந்த 'Body Shaming' எவ்வளவு பெரிய பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். இப்படி இருக்கையில் இதற்கு பள்ளி கல்லூரிகளிலிருந்தே முற்றுப்புள்ளி வைக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
ஏற்றுக்கொள்ளவே முடியாது
அதாவது இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மாநில பொதுக்கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி, "பேஸ்புக்கில் நான் என்னுடைய படத்தை பகிர்ந்திருந்தபோது 'தொப்பையை' குறைக்கச்சொல்லி சிலர் கூறியிருந்தனர். உடலமைப்பை வைத்து கேலி பேசும் 'Body Shaming' மிகவும் கேவலமான செயல் என்று அவருக்கு நான் விளக்கம் கூறியிருந்தேன். இப்படி 'Body Shaming' செய்பவர்கள் என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அன்பாக சொல்வதைப் போல பலர் இதனை தொடர்ந்து செய்து வருகிறார்.
உயிரிழப்பு கூட
எனது நண்பனின் சகோதரனுடைய மகன் இதனால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள தொடங்கினான். அவன் மீது நிற பாகுபாடுகள் காட்டப்பட்டன. இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானான். கடைசியில் அச்சிறுவன் பள்ளியை மாற்ற வேண்டியதாயிற்று. இது கூட பரவாயில்லை. இந்த 'Body Shaming' கொடுமையால் பலர் உயிரை விட்ட சம்பவங்கள் கூட நடந்திருக்கின்றன. எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் மீண்டும் சொல்கிறேன் இந்த கொடுமை நிறுத்தப்பட வேண்டும்.
நற்பண்புகள்
இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் பாடத்திட்டத்தில் விழிப்புணர்வை கல்வி பாடமாக சேர்ப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும். அதேபோல ஆசியர்கள் இது போன்ற சூழலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். நான் பாதிக்கப்பட்ட சிறுவனிடம் பேச இருக்கிறேன். சிறுவனின் குடும்பத்திற்கு நீங்கள்தான் தன்னம்பிக்கையை வழங்க வேண்டும். மனிதர்களை பொருத்த அளவில் அவர்களிடம் இருக்கும் செல்வமோ, அவர்களது நிறமோ பெரிய விஷயமல்ல. மாறாக அவர்களிடத்தில் இருக்கும் நற்பண்புகளைதான் நாம் பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் பலர் வரவேற்பளித்துள்ளனர்.