முல்லைப் பெரியாறு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கேரளாவிற்கு அவகாசம்.. நவ.11க்கு வழக்கு ஒத்திவைப்பு
திருவனந்தப்புரம்: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கை நவம்பர் 11ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதுவரை அணியின் நீர் மட்டத்தை தமிழ்நாடு 139.5 அடிக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடிக்கும் கீழாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் கொடூரமாக கொல்லப்பட்ட விசிக பிரமுகர்.. வெளியான சிசிடிவி காட்சி.. 7 பேர் சிக்கினர்!
ஆனால் நேற்று நடந்த வழக்கு விசாரணையில் அணியின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டியது இல்லை என்று கண்காணிப்பு குழுவும், மத்திய அரசும் தெரிவித்துவிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு அளித்த பதிலில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது. அங்கு 142 அடி வரை நீர் தேக்க முடியும். அணையின் பாதுகாப்பை கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணித்துதான் வருகிறது என்று கூறியது.
பதில் மனு
இதையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு வரும் முன் பதில் மனு தாக்கல் செய்த கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணை மோசமான நிலையில்தான் உள்ளது. அதை கைவிட்டுவிட்டு உடனே புதிய அணை கட்ட வேண்டும். 126 ஆண்டுகள் பழமையானது என்பதால் அணை பாதுகாப்பற்ற நிலையில்தான் உள்ளது. நீர்மட்ட 142 அடியாக உயர்த்தினால் பெரிய பாதிப்பு ஏற்படும். இதனால் 5 மாவட்டங்களில் இருக்கும் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள், என்று குறிப்பிட்டது.
கேரளா வாதம்
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், சிடி ரவிக்குமார் அமர்வு முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு வைத்த வாதத்தில், அணையின் நீர் மட்டத்தை 139.5 அடிக்கு கீழ் கொண்டு செல்ல வேண்டும். கேரளாவில் இனிதான் தீவிர மழை பெய்யும். கேரளா கீழே இருப்பதால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் கோரிக்கை சாத்தியம் கிடையாது என்று வாதம் வைத்தது.
பிரமாண பத்திரம்
அதோடு இந்த வழக்கில் நாங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை தற்போது இருக்கும் நீர் மட்டத்தை தொடர வேண்டும். 139.5 அடி வரை மட்டுமே தேக்கிவைக்க வேண்டும். அடுத்த விசாரணை வரை இவர்கள் நீரின் அளவை உயர்த்த கூடாது என்று கேரளா அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு வைத்த பதில் வாதத்தில், கேரளா அரசு எப்போதும் அணியின் நீர்மட்டத்தை எப்படியாவது 142 அடிக்கு கீழ் கொண்டு சென்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.
தமிழ்நாடு பதில்
அதனால்தான் இந்த முறையும் இப்படி வாதம் வைக்கிறது. அடுத்த அமர்வு வரை எங்களால் நீரின் அளவை 139.5 அடி வரை தேக்கி வைக்க முடியும். நவம்பர் 10 வரை மட்டுமே எங்களால் இந்த நீரின் அளவை தேக்கி வைக்க முடியும். அதற்கு பின் நாங்கள் நீரின் அளவை உயர்த்துவோம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் வைக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
ஒத்திவைப்பு
அதன்படி நவம்பர் 11ம் தேதி அடுத்த அமர்வில் வழக்கு விசாரிக்கப்படும். கேரளா அரசு புதிய பிரமாண பத்திரத்தை முழுமையான விவரங்களோடு தாக்கல் செய்ய வேண்டும். நவம்பர் 8ம் தேதிக்குள் இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை நீரின் அளவை 139.5 அடி வரை தேக்கி வைக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.