கேரளாவில் மற்றொரு சாதனை.. 25 ஆண்டுகளுக்கு பின்.. முஸ்லீம் லீக் சார்பில் பெண் வேட்பாளர்
திருவனந்தபுரம்: கேரளாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தேர்தலில் போட்டியிடப் பெண் வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்துடன் இணைந்து கேரளாவிலும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளுமே அங்கு முக்கிய கட்சிகளாக உள்ளன. பாஜக அங்கு மூன்றாவது அணியை உருவாக்க முயல்கிறது.
கடந்த காலங்களில் கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணியும் காங்கிரஸ் கூட்டணியுமே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவே அதிக வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கூட்டணி
இதன் காரணமாகக் காங்கிரஸ் கட்சி சுமார் 10 கட்சிகளுடன் வலுவான ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. கூட்டணியின் கட்சிகளின் உதவியுடன் இடதுசாரிகளை வீழ்த்திவிட முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது. 140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபையில் காங்கிரஸ் 92 இடங்களில் போடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக் கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக்
இதில் முதல்கட்டமாக 25 பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான முன்னாள் அமைச்சர் வி கே இப்ராஹிம் குஞ்சு உட்பட இரண்டு பேருக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல எட்டு சட்டசபை உறுப்பினர்களுக்குத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு
இதில் முக்கிய சிறப்பம்சமாக நூர்பினா ரஷீத் என்ற பெண்ணிற்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் கோழிக்கோடு தெற்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை
இது குறித்து நூர்பினா ரஷீத் கூறுகையில், "எங்கள் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை அனைத்திற்கும் இதுதான் பதில். நான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். என் கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவேன் என்று வாக்காளர்களுக்கு உறுதி அளிக்கிறேன்" என்றார்.