மேட்ச் பிக்சிங்.. பினராயி ஒரு "யூதாஸ்".. கேரளாவில் இயேசுவை எடுத்துக்காட்டி பேசிய மோடி.. புது யுக்தி
திருவனந்தபுரம்: கேரளாவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்று இருக்கும் பிரதமர் மோடி அங்கு இயேசுவையும், கிறிஸ்துவ மதத்தையும் எடுத்துக்காட்டி பிரச்சாரம் மேற்கொண்டார்.
சட்டசபை தேர்தலுக்காக தமிழகம் தீவிரமாக தயாராகிக்கொண்டு இருக்கும் போது கேரளாவிலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கேரளாவிலும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு இன்று பாலக்காட்டில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.
பாலக்காட்டில் பாஜக சார்பாக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் உட்பட பாஜக வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
மோடி பேச்சு
இன்று கேரளாவில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவில் பல காலமாக எல்டிஎப் மற்றும் யுடிஎப் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இவர்களுக்கு இடையில் ரகசிய ஒப்பந்தம் உள்ளது. இவர்கள் மேட்ச் பிக்சிங் செய்தது போல ரகசியம் ஒப்பந்தம் செய்து தேர்தலில் மாறி மாறி திருடுகிறார்கள். அதை பாஜக இந்த முறை முறியடிக்கும்.
பணம்
பணத்தை கொள்ளையடிப்பது மட்டுமே இவர்களின் நோக்கம் .அதிலும் காங்கிரஸ் கூட்டணியோ சூரிய ஒளியில் கூட ஊழல் செய்துள்ளது. மெட்ரோமேன் ஸ்ரீதரன்தான் கேரளாவின் மண்ணின் மைந்தன். இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றவர்களில் ஒருவர். கேரளாவின் வளர்ச்சிக்காக தன்னை இவர் அர்பணித்துள்ளார். கேரளாவிற்காக அதிகாரங்களை விடுத்து களமிறங்கி உள்ளார்.
முதுகில் குத்திவிட்டார்
யூதாஸ் ஒரு சில வெள்ளி துண்டுகளுக்காக இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுத்தார். கூடவே இருந்து இயேசுவை காட்டிக்கொடுத்தவர்தான் யூதாஸ். அதேபோல்தான் தற்போது பினராயி செயல்படுகிறார் . யூதாசை போல் தங்க கட்டிகளுக்காக பினராயி கேரள மக்களுக்கு துரோகம் இழைத்துள்ள்ளார். மக்கள் இவருக்கு தக்க தண்டனை கொடுப்பார்கள்.
கேரளா பாஜக
கேரளாவில் பாஜகவிற்கு ஆதரவாக காற்று வீச தொடங்கி உள்ளது. நிலைமை மாறி வருகிறது. கேரள மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.பாஜவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று முதல் தலைமுறை வாக்காளர்கள் விரும்புகிறார்கள். பாஜக கேரளாவில் எழுச்சி பெறும், புதிய உயரம் தொடும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
யுக்தி
பொதுவாக பிரதமர் மோடி இப்படி கிறிஸ்துவம் குறித்தெல்லாம் வடமாநிலங்களில் எடுத்துக்காட்டி பேச மாட்டார். ஆனால் கேரளாவில் கிறிஸ்துவ வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் அவர்களுடன் கனெக்ட் ஆகும் வகையில் இப்படி பேசி உள்ளார். கேரளாவில் பீப் தடை குறித்து பேசாத பாஜக தற்போது கிறிஸ்துவத்திற்கு நெருக்கமாக பேச தொடங்கி உள்ளது.. இதன் மூலம் கேரளாவில் பாஜக புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.