இலங்கையிலிருந்து தீவிரவாதிகளுடன் புறப்பட்டுள்ள மர்ம படகு.! இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பு
திருவனந்தபுரம்: மர்மநபர்கள் சிலர் வெள்ளை நிறப்படகில் இலங்கையிலிருந்து லட்சத்தீவுகள் நோக்கி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கேரள கடல் எல்லை வழியாக ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவி விடாமல் தடுக்க, இந்திய கடற்படை சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
லட்சத்தீவுகள் மற்றும் மினிக்காய் தீவுகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை - இந்தியா இடையிலான கடல் பகுதிகளிலும் கடலோர காவல்படை கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்த்தப்பட்ட, தொடர் குண்டுவெடிப்புகள் உலகையே உலுக்கின. இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில், சுமார் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உலக மக்களை உறைய வைத்த இந்த தாக்குதல்களில் ஈடுபட்டது ஐஎஸ் தீவிரவாத அமைப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் அந்நாட்டில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள தொடர்புகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையிலிருந்து மர்ம படகு ஒன்று இந்தியாவிற்கு சொந்தமான கடற்பகுதியிலுள்ள தீவுகளை நோக்கி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் தான் தற்போது இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
இலங்கையிலிருந்து 15-க்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் அடங்கிய குழு ஒன்று வெள்ளை நிறப்படகில் புறப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அந்த படகு கேரளாவிற்கு அருகிலுள்ள லட்சத்தீவு மற்றும் மினிக்காய் தீவுகள் நோக்கி செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது
தமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்?.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி
ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து, கேரள காவல்நிலையங்கள் விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட படகில் வருவதாக கூறப்படுபவர்கள், உண்மையில் தீவிரவாதிகள் தானா. அப்படி இருக்கும்பட்சத்தில் என்ன சதிதிட்டத்துடன் இந்திய கடல் எல்லைக்குள் நுழைகிறார்கள் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடற்படையினர் தங்களது கண்காணிப்பை பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளனர்.