காதலி கிரீஷ்மா கொடுத்த கஷாயம்.. துடித்து இறந்த ஷாரோன்.. கொலை வழக்கு தமிழகத்துக்கு மாற்றம்? என்னாச்சு
திருவனந்தபுரம்: ஷாரோன் ராஜ் கொலை வழக்கை விசாரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததாகவும், இதனால், இந்த வழக்கை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்க கேரள போலீசார் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரளாவில் பாறசாலை மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (23). இவர் ரேடியாலஜி பிரிவில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.
கன்னியா குமரி மாவட்டம் ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா (22). இவர் தக்கலை அருகே ஒரு உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

கசாயத்தில் விஷம் கலந்து..
இருவரும் காதலித்து வந்த நிலையில், வீட்டில் வேறு ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமணம் நிச்சயிக்கபட்டு உள்ளது. இதனால், காதலை கைவிடுமாறு ஷாரோனை கிரீஷ்மா கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால், காதலை ஷாரோன் கைவிட மறுத்து இருக்கிறார். இதனால், ஷாரோனை வரவழைத்த கிரீஷ்மா, கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து இருக்கிறார். இதை அறியாமல் ஷாரோனும் கசாயத்தை குடித்து இருக்கிறார். இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷாரோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

திட்டமிட்டு கொலை
மகனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக ஷாரோனின் பெற்றோர் புகார் அளித்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் வழக்காக மாறியது. வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் திட்டமிட்டு ஷாரோனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. தனது சதி செயல் வெளியில் தெரிந்தததும் கிரீஷ்மா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

குற்றப்புலனாய்வு விசாரணைக்கு மாற்றம்
தற்போது திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக கிரீஷ்மாவின் தாயாரும் தாய்மாமனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரீஷ்மா குடும்பத்திற்கு ஆதரவாக பாறசாலை பகுதி போலீசார் செயல்படுவதாக ஷாரோனின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை திருவனந்தபுரம் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு மாற்றி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆடியோ வெளியாகி சர்ச்சை
குற்றப்புலனய்பு பிரிவு விசாரணை நடத்தி வரும் நிலையில், தாங்கள் நடத்திய விசாரணை அடிப்படையிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினரும் விசாரணையை நடத்தியதாக பாறசாலை காவல் ஆய்வாளர் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்து. வழக்கின் விசாரணையை பாதிக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் ஹேமந்த் வெளியிட்ட ஆடியோ இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது.

தமிழக போலீசாரிடம் ஒப்படைக்க..
இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அமைச்சர் ஆன்றனி ராஜூ தெரிவித்து இருந்தார். இந்த விவகாரத்தில் கேரள போலீசார் இந்த வழக்கை விசாரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததாக பேசப்படுகிறது. இதனால், இந்த வழக்கை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கலாமா? என்று கேரள போலீசார் ஆலோசித்ததாகவும் இதற்கான முடிவும் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஷாரோன் ராஜின் தந்தை எதிர்ப்பு
ஆனால், தமிழக போலீசாரிடம் வழக்கை ஒப்படைக்க ஷாரோன் ராஜின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். திருவனந்தபுரம் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கை சிறப்பாக விசாரித்து வரும் நிலையில், விசாரணை மாற்றப்பட்டால் சரியாக இருக்காது என்று ஷாரோன் ராஜின் தந்தை எதிர்ப்பை பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications