திருச்சி
உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டையும், அதன் மேல் அமைந்துள்ள விநாயகர் கோவிலும், திருச்சி நகரின் பிரதான அடையாளங்கள். நகரின் மற்றொறு அடையாளம் ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோவில். இந்தியாவிலுள்ள பெரிய கோவில்களில் ஒன்று ஸ்ரீரங்கம் கோவில். காவிரி ஆற்றின் ஓரம் இந்தக் கோவில் எழிலுற அமைந்துள்ளது. நகரிலுள்ள மற்றொரு பிரபல கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்.
வரலாறு: சோழர்கள் காலத்தில் வளம் பெற்றிருந்தது திருச்சி என்று அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி. கி.பி. முதலாம் நூற்றாண்டின்போது, பல்லவர் மற்றும் பாண்டியர் கைகளுக்கு திருச்சி மாறியது. கி.பி. 10-வது நூற்றாண்டின்போது மீண்டும் சோழர் கைக்குத் திரும்பியது. சோழர்கள் தங்கள் பலம், செல்வாக்கு, ஆட்சி ஆகியவற்றை இழந்தபோது, விஜயநகரப் பேரரசின் கைக்கு திருச்சி சென்றது. கி.பி. 1565-ம் ஆண்டு தக்காண மன்னர்கள் திருச்சியை கைப்பற்றும் வரை விஜயநகர ஆட்சியின் கீழ் திருச்சி இருந்தது.
திருச்சி நகரம், அதிலுள்ள கோட்டையும், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் வடிவமைத்துக் கட்டப்பட்டவை.
தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வளர்ந்து வரும் தொழில் நகரமாகும். மையப் பகுதியில் இது இருப்பதாலும், வேகமாக வளர்ந்து வருவதாலும், தலைநகரை சென்னையிலிருந்து இங்கு மாற்ற முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். திட்டமிட்டது நினைவுகூறத்தக்கது.
23.26 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள திருச்சி நகரம், 1991-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 7 லட்சம் மக்களைக் கொண்டது. ஆண்டு முழுவதும் சராசரியான வெப்ப நிலையைக் கொண்டதாக திருச்சி உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 83.5 சென்டிமீட்டர் மழை பதிவாகிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.