வெள்ளத்தால் வந்த கோபம்.. சென்னை ராயபுரம் மக்கள் சாலைமறியல்! திமுக எம்எல்ஏவிடம் வாக்குவாதம்-பரபரப்பு
சென்னை: சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் திமுகவின் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம்ஸ் மூர்த்தியிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் பொதுமக்களை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சென்னை அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

நேற்று முன்தினம் முதல் நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்து கொட்டிய கனமழையால் சென்னையை வெள்ளம் சூழ்ந்தது. இப்போது புயல் ஆந்திராவில் கரையை கடந்து வரும் நிலையில் சென்னையில் மழை இல்லை.
இருப்பினும் பல சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை. தொடர்ந்து தேங்கி உள்ளது. மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் முழுவீச்சில் களமிறங்கி உள்ளனர். சாலை, குடியிருப்பு பகுதிளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ராயபுரத்திலும் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக பனைமரத்தொட்டி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் அங்கு மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். இதற்கிடையே மின்சாரமும் தடைப்பட்டது. மழை வெள்ளம் சூழ்ந்தாலும் கூட அந்த பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி சார்பில் உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை எனக்கூறி இன்று 100க்கும் அதிகமானவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராயபுரம் காவல் நிலையம் அருகே அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து ராயபுரம் திமுக எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி வந்து பொதுமக்களை சமாதானம் செய்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் அவர் பொறுமையாக கேட்டதோடு உதவிகள் செய்வதாக உறுதியளித்தார். போலீசாரும் போராட்டக்காரர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் ராயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications