பாரதி பக்கம்
ஜூன் 02, 2001
2.
வானமே கிழிந்து வருவது போன்ற புயற்காற்று.
அலைகள் சாரி வீசுகின்றன: நீர்த் துளிப் படுகின்றன.
அவை மோதி வெடிக்கின்றன: சூறையாடுகின்றன.
கப்பல் நிர்த்தனஞ் செய்கிறது:
மின்வேகத்தில் ஏற்றப்படுகின்றது:
பாறையில் மோதிவிட்டது.
ஹதம்!
இருறூறு உயிர்கள் அழிந்தன.
அழியும்முன், அவை, யுக முடிவின் அனுபவம் எங்ஙனமிருக்கு
மென்பதை அறிநதுகொண்டு போயின.
ஊழி முடிவும் இப்படியேதானிருக்கும்.
உலகம் ஓடுநீராகிவிடும்:தீ, நீர்
சக்தி காற்றாகிவிடுவாள்.
சிவன் வெறியிலே யிருப்பான்.
இவ்வுலகம் ஒன்றென்பது தோன்றும்.
அஃது சக்தியென்பது தோன்றும்.
அவள் பின்னே சிவன் நிற்பது தோன்றும்.
காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான். அவற்றில்
உயிர் பெய்கிறான்.
காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி
நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி, நீரைத் தூளாக்கித்
தூளை நீராக்கிச் சண்ட மாருதம் செய்கின்றான்.
காற்றே யுகமுடிவு செய்கின்றான்.
காற்றே காக்கின்றான்.
அவன் நம்மைக் காத்திடுக.
நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யட்ஷம் ப்ரஹமாசி.
DVD












Click it and Unblock the Notifications