தமிழக கடலோரப் பகுதிகள் 2012ல் அழியும்- ஸ்ரீ மகாசூரிய தேஜஸ்வி சுவாமி
கன்னியாகுமரி: வரும் 2012ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கடலோர பகுதிகள் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஸ்ரீமாகசூரிய தேஜஸ்வி சுவாமிகள் கூறினர்.
இந்த சுவாமிகள், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் கட்டப்பனா என்ர இடத்தைச் சேர்ந்தவர். இவர் நதிகளையும், மரங்களையும் பாதுகாக்க வேண்டி கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ரத யாத்திரை தொடங்கி இந்தியாவின் பல்வேறு புண்ணிய நகரங்கள் வழியாக சுமார் 17 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மீண்டும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புண்ணிய நதிகளின் புனித நீரை முக்கடல் சங்கமத்தில் ஊற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதையொட்டி, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்தராவில் நிருபர்களிடம் ஸ்ரீமகாசூரிய தேஜஸ்வி சுவாமிகள் பேசுகையில்,
பூமியில் உயிருடன் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தந்தையாகவும், சக்தி களஞ்சியமாகவும் விளங்கும் சூரியனை உதயத்தின் போது இருபது நிமிடம் தரிசனம் செய்தலே போதும். உணவு தேவையில்லை. நீரும் தேவையில்லை என்ற உண்மையை சூரிய யோகத்தின் மூலம் மக்களுக்கு உணர்த்தி வருகிறேன். இன்றைய நவீன உலகில் இயற்கையை யாரும் மதிப்பதில்லை.
கோபத்தில் பூமி அன்னை...
நதிகளையும், மரங்களையும், பூமியையும் அழிக்கின்றனர். இதனால் பூமி அன்னை கோபம் கொண்டுள்ளாள்.
அதனால்தான் கடந்த காலங்களில் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருகிறது. சுனாமி, வெள்ளம், பூகம்பம் போன்றவைகளும் அதிகரித்து வருகின்றன.
வரும் 2012ம் ஆண்டில் கன்னியாகுமரி, கொச்சி, சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகள் மிகபெரிய இயற்கை பேரழிவுகளை சந்திக்கும்.
தற்போது இந்தியாவின் கங்கை, யமுனை, கிருஷ்ணா,சபர்மதி, பிரம்மபுத்திரா, நர்மதா, கோதாவரி, சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட 112 நதிகள் உள்ளன. இந்த நதியில் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டு இங்கு (கன்னியாகுமரி முக்கடல்) ஊற்றப்படுகிறது.
பின்னர் இங்கிருந்து சேகரிக்கப்படும் புனித நீர் வரும் டிசம்பர் 31ம் தேதி ஹிமாலயாவில் ஊற்றப்படும் என்றார் சுவாமிகள்.