மார்கழி மகோத்ஸவ விழா: இசைக்கலைஞர்களுக்கு சிறப்பு விருது
சென்னை: பாரத் கலாச்சார் சார்பில் நடந்த மார்கழி மகோத்ஸவ விழாவில், முதிய கலைஞர்களுக்கும், வளரும் கலைஞர்களுக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
சென்னையில் உள்ள இசைக்கலை அமைப்பின் 23-வது ஆண்டுவிழா மற்றும் 24-வது மார்கழி மகோத்ஸவ விழாவை, ஆந்திர கவர்னர் இ.எஸ்.எல். நரசிம்மன் நேற்று தொடங்கிவைத்துப் பேசினார்.
விழாவில், கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவுக்கு ஞானகலா பாரதி, கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராம்க்கு விஸ்வகலா பாரதி, பிரபல நடிகை எம்.என்.ராஜமுக்கு நாட்டிய கலாதார், பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு கானகலாதார் விருதுகளை ஆந்திர கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன் வழங்கினார்.
பரதநாட்டிய குரு கிருஷ்ணகுமாரி நரேந்திரன், 'ஆச்சார்ய கலா பாரதி', எஸ்.பி.காந்தன், ஸ்ரீசுதாகர் ஆகியோர் 'கலா சேவாபாரதி', கோவை கே.எஸ்.கிருஷ்ணன் (கோவை கேஆர்எஸ்), 'நாடக கலா பாரதி', ஜே.கண்ணன் 'ரசிக கலா பாரதி' விருதுகளைப் பெற்றனர். வி.வி.எஸ்.மணியன், நந்திதா நெரூர் ஆகியோர் சிறப்பு விருது பெற்றனர்.
இளம் கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. 4 வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம் முடித்து, பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கும் இளம் கலைஞர் பவ்யா பாலசுப்பிரமணியனுக்கு 'யுவகலாபாரதி' விருதை, பரதநாட்டிய குரு வி.பி.தனஞ்செயன் வழங்கி கவுரவித்தார். மேலும் 14 இளம் கலைஞர்கள் 'யுவகலாபாரதி' விருது பெற்றனர்.
விழா மலரை, ஆந்திர கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன் வெளியிட, தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டி பெற்றுக்கொண்டார்.
பாரத் கலாச்சார் அமைப்பின் சேவைகளை திருமதி ஒய்.ஜி.பி., செயலாளர் ஒய்.ஜி.மகேந்திரா ஆகியோர் பேசினார். முன்னதாக சுதா மகேந்திரா வரவேற்றுப் பேசினார்.












Click it and Unblock the Notifications