துபாயில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஈமான் அமைப்பின் ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை மேற்கொண்டு வரும் சமுதாய கல்வி மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டினார். ஈமான் அமைப்பு செய்து வரும் உயர்கல்வி உதவிகள் குறித்தும் விவரித்தார். இதுபோன்ற நிகழ்வுகளை ஒவ்வொரு ஜமாஅத்தினரும் மேற்கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தினையும் வெளியிட்டார்.
பொறியாளர் ஷேக் முஹம்மது துவக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை வி. களத்தூர் சகோதரர்களால் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்டு கல்வி உதவி, வட்டியில்லாக் கடன், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். சபியுல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்.
விஸ்டம் கல்வி நிறுவனத்தின் மேலாளர் ராஜா முஹம்மது அவர்கள் அமீரகத்தில் பணிபுரிந்து கொண்டே தொலைநிலைக்கல்வி மூலம் தங்களது தகுதிகளை உயர்த்திக் கொள்வதற்குரிய வழிமுறைகளை விவரித்தார்.
பத்திரிகையாளர் வி. களத்தூர் கமால் பாஷா உயர்கல்வி நிறுவனங்கள் ஆரம்பிப்பதைவிட நர்சரி போன்ற ஆரம்பக்கல்வி நிறுவனங்களை துவங்க வேண்டியதன் அவசியத்தை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையது எம் ஸலாஹுதீன் அவர்கள் கூறியதை நினைவு கூர்ந்தார்.
பிறைமேடை மாதமிருமுறை இதழை மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மௌலவி பி.கே.என். அப்துல் காதர் ஆலிம் அறிமுகப்படுத்த பத்திரிகையாளர் வி.களத்தூர் கமால் பாஷா, விஸ்டம் கல்வி நிறுவன மேலாளர் ராஜா முஹம்மது உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
வாழ்த்துரை வழங்கிய மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மௌலவி பி.கே.என். அப்துல் காதர் ஆலிம், நபிகளாரின் காலத்தில் சிறைவாசிகள் தங்கள் விடுதலையாக சக கைதிக்கு கல்வி கற்றுக் கொடுக்க வலியுறுத்தியதை நினைவு கூர்ந்தார்.
அரபு நாடுகளில் நம்மவர்கள் பணிக்காக வந்த பின்னர் ஒவ்வொரு ஊரிலும் கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை நம்மால் மறுக்க இயலாது. மதுரையில் நம்மவர்களால் ஐந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சிறப்புற நடத்தப்பட்டு வருகின்றன.
இந்திய விடுதலைப் போரின் போது ஆங்கிலம் கற்கக் கூடாது என உலமாக்கள் கட்டளையிட்டதன் காரணமாக நாம் கல்வியில் பின் தங்கினோம். இன்று அந்நிலை மாறி வருகிறது. ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் இன்று உயர்கல்வியில் சிறப்புற தேறி வருவது மகிழ்வளிக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்கள் காயிதேமில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப், சிராஜுல் மில்லத் ஏ. கே. அப்துஸ் ஸமத் சாஹிப் உள்ளிட்டோர் ஆற்றிய கல்விச் சேவைகள் நினைவு கூறத்தக்கது.
துபாய் ராஷித் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் அய்யம்பேட்டை டாக்டர் முஹம்மது இஸ்மாயில் தனது குடும்பத்தில் ஆண்களும், பெண்களும் கல்வி கற்று வருதை அறிந்து தங்களது உறவினர்களது குடும்பத்தினரும் கல்வியில் கவனம் செலுத்தி வருவது குறித்து விவரித்தார். இதுபோல் ஒவ்வொரு குடும்பத்தினரும் கல்வியில் கவனம் செலுத்தினால் சமுதாயத்தில் கல்வி மறுமலர்ச்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
காயல் நல மன்ற துணைத்தலைவர் காயல் நூஹு சாஹிப் அவர்கள் தனது உரையில் காயல் நல மன்றம் ஆரம்பத்தில் 25 உறுப்பினர்களுடன் துவங்கப்பட்டு இன்று 500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் சிறப்புற செயல்பட்டு வருகிறது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
உலகெங்கிலும் செயல்பட்டு வரும் காயல் நல மன்றங்களை ஒருங்கிணைத்து காயல் மாநகரில் உள்ள இக்ரா கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து அரசு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணாக்கர்களுக்கு பரிசளிக்கப்பட்டு வருகிறது. துபாயில் உள்ள அனைத்து ஊர் ஜமாஅத்தார்களும் இணைந்து ஈமான் அமைப்பின் தலைமையில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்ற தனது ஆவலை வெளியிட்டார்.
என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? எனும் தலைப்பில் ஈடிஏ ஸ்டார் சிமெண்ட் மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் சையது அபுதாஹிர் அவர்கள் தனது உரையில் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை மேற்கொண்டு வரும் கல்வி மேம்ப்பாட்டுப் பணிகள் குறித்து பாராட்டு தெரிவித்தார்.
நபிகளாரின் காலத்தில் சிறைக்கைதிகள் சக கைதிக்கு கல்வியினைக் கற்றுக் கொடுத்து விடுதலை பெறலாம் என்ற நிகழ்வு, அறிஞரின் பேனா மை ஷஹீதாகும் போராளிக்கு இணையானது போன்ற நபிகளாரின் வாக்கினை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய கல்வி மேம்பாட்டுக்கு ஆற்றி வரும் பணிகள் பாராட்டுக்குரியது.
கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாம் கூறி வருவது நாம் அறியாததல்ல. கல்வி இல்லாதவன் எதற்கும் லாயக்கில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். நமது முன்னாள் இந்திய ஜனாதிபதி கூறியது போல் இந்தியா 2020 ல் சூப்பர் பவர் ஆவது உறுதி.
சீனப்பழமொழி கூறுவதைப் போல் பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேலானது. பெற்றோர்கள் தங்களது குழுந்தைகள் எந்த படிப்பு படிக்க தகுதியானவர் என்பதனை உணர்ந்து படிக்க வைக்க வேண்டும். மேலும் பல்வேறு வகையான படிப்புகள், அவைகள் வழங்க்ப்படும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறித்து விவரித்தார்.
முடிவில், முஹம்மது நன்றி கூறினார். நிகழ்வில் பல்வேறு ஊரினைச் சேர்ந்த ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













Click it and Unblock the Notifications