யானைகள் காட்டுக்குள் செல்ல வனபேச்சியம்மனுக்கு பொங்கல் வைத்த வனத்துறையினர்
களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்துள்ள யானைக் கூட்டங்கள் மீண்டும் காட்டுக்குள் செல்ல வேண்டி வனத்துறையினர் ரகசியமாக பொங்கலிட்டு வழிபட்டனர்.
களக்காடு அருகே உள்ள புலவன்குடியிருப்பு, பூதத்தான்குடியிருப்பு, நெடுவிளை, பிளவக்கல் இசக்கியம்மன் கோவில் பகுதியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும். இந்த ஆண்டு தற்போது 20 யானைகள் 3 குழுக்களாக பிரிந்து அந்த பகுதியில் உலா வருகின்றன. இரவில் ஊருக்குள் புகும் யானைகள் பயிர்களை துவம்சம் செய்கின்றன.
பொங்கல் வழிபாடு
யானைகள் அட்டகாசத்தால் ஒரே வாரத்தில் 3,000 வாழை மரங்கள், 60க்கும் மேற்பட்ட தென்னைகள், பனை மரங்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். யானைகளின் அட்டகாசத்தை அடக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தும் அவர்களால் கட்டுபடுத்த முடியவில்லை. இதனையடுத்து வனத்துறை சார்பில் நேற்று தலையணை அருகே உள்ள வனபேச்சியம்மன் கோவிலில் யானைகள் காட்டுக்குள் செல்ல வேண்டி ரகசியமாக சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வனத்துறையினர் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இதில் வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.