தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 42% அதிகம்: சென்னையில் 10 செ.மீ. அதிகம்
சென்னை: தமிழ்நாட்டில் அன்மையில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 42 சதவிகிதம் அதிகமாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒய்.ஏ.ராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை பற்றிய கருத்தரங்கம் சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை வானிலை ஆராய்ச்சித்துறை துணை டைரக்டர் ஜெனரல் ஒய்.ஏ.ராஜ் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 91 செ. மீ. மழை பெய்யும். இதில் 48 சதவிகிதம் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக கடலோர பகுதிகளில் அதிக அளவு மழை பெய்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் 5-ம் தேதி வரை நீடித்தது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 42 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு குறைவான அளவு மழையே பெய்தது. ஆனால் கடந்த 2004-ம் ஆண்டு முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக நன்றாக பெய்கிறது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் மூலம் கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்பட 50 இடங்களில் 100 செ.மீ. மழையும், 35 இடங்களில் 150 செ.மீ. மழையும், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் 360 செ.மீ. மழையும் கிடைத்து. கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 431 செ.மீ. மழை பெய்தது என்றார்.
இதையடு்தது சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது,
வழக்கமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 20-ம் தேதி துவங்கும். ஆனால் கடந்த ஆண்டு தாமதாமாக அக்டோபர் 29-ம் தேதி தான் துவங்கியது. சென்னையில் வழக்கத்தை விட 10 செ.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. மேலும், தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது என்றார்.
தமிழக அரசின் விவசாயத்துறை துணை இயக்குனர் எஸ்.சந்தான கோபாலகிருஷ்ணன் பேசியதாவது,
இந்த ஆண்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தானியங்கி வானிலை தகவல் மையங்கள் அமைக்கப்படும். அதன் மூலம் விவசாயிகள் மண்ணின் ஈரத்தன்மை, காற்றின் வேகம், வெயிலின் அளவு போன்ற தகவல்களை அறிந்துகொள்ளலாம் என்றார்.