தீபாவளி: பட்டாசு, ஆடை, நகை விற்பனை படுஜோர்!
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும். இது இந்துக்களின் பண்டிகை என்றாலும் அனைத்து மதத்தினவரும் பட்டாசு வெடித்து மகிழ்கின்றனர். பட்டாசு என்றுதும் சிவகாசி ஞாபகம் வருகிறது. சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பட்டாசு தயாரிக்கப்படும். தமிழக்த்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படும். இந்த மாதத்தில் மட்டும் சிவகாசி பட்டாசு ஆலைகளில் கல்லா நிரம்பிவிடும்.
நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் சிறு, சிறு பட்டாசுக் கடைகள் முளைத்துவிடும். அங்கு சிறுவர்கள் கூட்டம் அலைமோதும். தீபாவளிக்கு 3 வாரங்களுக்கு முன்பே சிறுவர்கள் பட்டாசுகள் வெடிக்கத் துவங்விடுவார்கள்.
பண்டிகை என்றால் புத்தாடை, இனிப்புகள் இல்லாமலா. துணிக்கடைகளில் வியாபாரம் உச்சகட்டத்தில் நடக்கும். சிறிய கடைகள், பெரிய கடைகள், தெருவோரக் கடைகள் என்று அனைத்து துணிக் கடைகளிலும் இரவு, பகலாக வியாபாரம் நடக்கும். மக்கள் தங்கள் வசதிக்கேற்ப துணிகள் எடுப்பார்கள். பண்டிகை என்றால் அக்கம், பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்வது நம் பண்பாடு. அதனால் இனிப்புக் கடைகளிலும் வியாபாரம் களைகட்டும். தீபாவளிக்காக ஸ்பெஷலாக புதுப்புது இனிப்புகள் செய்வார்கள். எவ்வளவு இனிப்பு செய்தாலும் இமைக்கும் நேரத்தில் விற்றுவிடும்.
ஆடைகள் மட்டும் வாங்கிக் கொடுத்தால் நம் பெண்கள் திருப்தியடைந்து விடுவார்களா?. என்னாங்க நல்ல நாளும் பொழுதுமா ஒரு நகை கூட வாங்கித் தரமாட்டீகளா என்பார்கள். தங்கம் விற்கின்ற விலைக்கு அதை கடையில் வைத்துப் பார்ப்பது தான் அழகு, கழுத்தில் எல்லாம் அணியக் கூடாதம்மா என்று கணவர் கூறுவார். சும்மா விடுவார்களா அது அதுக்கு ஐஸ் வைத்து ஒரு நகையை வாங்கிவிடுவார்கள்.
அதனால் தங்கத்தின் விலை எவ்வளவு தான் உயர்ந்தாலும் தங்க வியாபாரிகள் காட்டில் மழை தான். அடுத்து கவரிங் நகை வியாபாரம். நம்ம வீட்டு பசங்களுக்கு புத்தாடை எடுத்துக் கொடுத்தால் போதும், குஷியாகிவிடுவார்கள். பெண் குழந்தைகளுக்கு புத்தாடை எடு்ததுக் கொடுத்தால் என்ன அப்பா, அவ்வளவு தானா. மேட்சிங்கா கம்மல், செயின், வளையல், நெத்திச்சுட்டி, மோதிரம் வேண்டும் என்று கேட்பார்கள். அத்தனையும் தங்கத்தில் வாங்கிக் கொடுக்க முடியாதல்லவா.
எடு வண்டியை, ஓடு கவரிங் நகைக்கடைக்கு என்று அப்பாமார்கள் செல்வார்கள். அதனால் கவரிங் நகைக்கடைகளிலும் வியாபாரம் அமோகமாக இருக்கும். அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டீர்களா. அடுத்து அப்பா டிரஸ்ஸுக்கு மேட்சா ஒரு செருப்பு இருந்தால் நல்லா இருக்குமே என்பார்கள். இத்தனை வாங்கியாச்சு, அது ஒன்ன வாங்கிக் கொடு்க்க மாட்டோமா என்று மேட்சிங் செருப்பும் வாங்கிக் கொடுப்பார்கள். அதனால் செருப்புக் கடைகளிலும் வியாபாரம் நன்றாக இருக்கும்.
நம்ம சாதாரண செருப்பை வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு கூட்டி வந்துவிடலாம் என்று நினைத்தால் கடைக்காரர் பாப்பா இந்த செருப்பைப் பார்த்தியா ஹன்சிகா அந்த படத்தில் போட்டுட்டு வருவாரே, அதேதான் என்று சிவகாசி ராக்கெட்டை நம்ம வீட்டு பாப்பாக்களிடம் மெதுவாக பற்ற வைத்து விடுவார். பிறகென்ன உடனே எனக்கு அந்த செருப்பு தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிவிடுவார்கள் நம்ம குட்டீஸ்.
இது போதாதென்று, என்னங்க அந்த செருப்பைப் பார்த்தீங்களா சினேகா ஒரு படத்தில் போட்டிருந்தது மாதிரி இல்ல அப்படின்னு மனைவி கேட்க அதையும் வாங்கிக் கொடுக்கத் தானே வேணும்.
மொத்தத்தில் தீபாவளி என்றால் நாலாபுறமும் நல்ல வியாபாரம்தான். அதுவும் நகரங்களில் இந்த வியாபாரம் பல மடங்கு எகிறும். மொத்தத்தில் தீபாவளி என்பது மக்கள் மனதில் மட்டுமல்ல, வணிகர்களின் மனதிலும் கூட இன்பத்தை வாரி இறைக்கும் திருவிழாவாக மாறியுள்ளது என்பதே உண்மை.