காந்தியடிகளுக்காக சிறை சென்ற கூத்த நயினார் பிள்ளை
மகாத்மா காந்தி 1934-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி அரிஜன புனித யாத்திரிக்கைக்காக நெல்லைக்கு வந்தார். அப்போதெல்லாம் காந்தியை எந்த ஊருக்கு அழைத்து செல்கிறார்களோ அவர்கள் ஆங்கிலேய அரசுக்கு பொருள் அல்லது நிலம் ஆகியவற்றை கப்பமாக செலுத்த வேண்டும்.
அதன்படி காந்திக்காக ஆங்கிலேய அரசுக்கு 15 செண்ட் நிலத்தை காணிக்கையாக கொடுத்தவர் தான் கூத்த நயினார் பிள்ளை. அந்த இடம் தற்போது திருநெல்வேலி சந்தி பிள்ளையார் கோவில் அருகே வடம்போக்கு தெருவில் உள்ளது. இவ்வாறு அவர் நிலம் கொடுத்த பிறகு தான் காந்தியை திருநெல்வேலிக்கு வர அனுமதி கொடுத்தனர். மேலும் காந்தி திருநெல்வேலியில் தங்குவதற்கு 3 நாட்கள் மட்டுமே ஆங்கிலேய அரசு அனுமதி கொடுத்தது. அதற்கு மேல் காந்தி தங்குவதற்கு அனுமதி இல்லை.
மாகத்மா காந்தி திருநெல்வேலிக்கு வருவதையொட்டி நகரம் முழுவது்ம் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. காந்தி கூத்த நயினார் பிள்ளையின் இல்லமான சாவடி இலத்தில் வந்து தங்கினார். அப்போது அங்கு சமபந்தி விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேல மவுண்ட் ரோடு பகுதியிலிருந்து ஏரளாமான அரிஜனர்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
அப்போது ஒரு அரிஜன சிறுமிக்கு தங்கம் என காந்தி பெயர் சூட்டினார். காந்திஜி சாவடி இல்லத்தில் தங்கியிருந்தபோது அவருக்கு தனியாக ஒரு கட்டில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த கட்டிலின் விசேஷம் என்னவென்றால் அது வெறும் ஒரு மணி நேரத்தில் உருவாக்கப்பட்டது தான். அது இன்னும் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதே போல் காந்தி தங்கியிருந்த சமயத்தில் சிறுது நேரம் மாடியில் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறினாராம். உடனே கூத்த நயினார் பிள்ளை பளிங்கு கல் பெஞ்சை அமைத்து கொடுத்துள்ளார். அதுவும் இங்குள்ளது. காந்தி வெள்ளாட்டு பாலையும், வேர் கடலையையும் விரும்பி சாப்பிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்காக கூத்த நயினார் பிள்ளை ஒரு வெள்ளாட்டை வாங்கி பாலுக்கு ஏற்பாடு செய்தார். மேலும் காந்தி சைவ பிரியர் என்பதால் ஆறுமுகம் என்ற சமையல்காரரை வேலைக்கு அமர்த்தி அறுசுவை விருந்தும் படைத்தார். இந்த விருந்தினால் மெய் மறந்த காந்திஜி 3 நாட்கள் பயணத்தை மேலும் 3 நாட்கள் நீ்ட்டித்தார்.
இந்த தகவல் ஆங்கிலேய அரசுக்கு தெரிய வந்தது. இதனால் கோபமடைந்த ஆங்கிலேய அரசாங்கம் கூத்த நயினார் பிள்ளையை கைது செய்தது. இதை அறி்ந்த காந்திஜி உடனடியாக கல்கத்தா வைஸ்சிராயை தொடர்பு கொண்டு 4 நாட்கள் தங்கியது என்னுடைய தவறு தான். எனவே தயவு செய்து என்னை கைது செய்யுங்கள். கூத்த நயினார் பிள்ளையை விடுதலை செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து கூத்த நயினார் பிள்ளை விடுதலை செய்யப்பட்டார். காந்தி அங்கு தங்கியிருந்தபோது மணல் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தார். அதே நேரத்தில் காந்தியை நாற்காலியில் அமர வைத்து ஒரு ஒவியர் படம் வரைந்துள்ளார். அந்த படம் இன்றும் கூத்த நயினார் பிள்ளை வீட்டில் உள்ளது. 1937-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் இவர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
கூத்த நயினார் பிள்ளைக்கு மொத்தம் 4 மகன்கள். இவற்றில் மூத்த மகன் சங்கரசுப்பிரமணியன் காலமாகி விட்டார். இரண்டாவது மகன் சேதுசுப்பிரமணியன், மூன்றாவது மகன் திருமலை கொழுத்து அய்யப்பன் ஆகியோர் திருநெல்வேலியில் உள்ள கூத்த பிள்ளையின் பூர்விக வீ்ட்டில் வசித்து வருகின்றனர்.
நான்காவது மகன் ஆலங்குளத்தில் வசித்து வருகிறார். நேரு திருநெல்வேலிக்கு வந்தபோது கூத்த நயினார் பிள்ளை, அவருடைய அண்ணன் சாவடி சுப்பிரமணியபிள்ளை ஆகியோருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். கூத்த நயினார் பிள்ளை திருநெல்வேலி காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்துள்ளார். இவரது அஸ்தியை அவரது மகன்கள் அவரது நினைவாக வீட்டிலேயே வைத்துள்ளனர். அந்த வீட்டில் காந்தி சிலை ஒன்றும் உள்ளது.