தமிழுக்கு ஆக்கமான ஒரு முனைவர் பட்ட ஆய்வு
கடந்த அரைநூற்றாண்டுக் காலமாகத் தமிழாய்வுகள் பலவகையில் வளர்ந்து வந்துள்ளன. அறிஞர் மு.வ, அறிஞர் வ.சுப.மாணிக்கனார், முனைவர் மா.இராசமாணிக்கனார், அ.சிதம்பரநாதனார் போன்ற தமிழறிஞர்கள் பட்டப்பேற்றிற்காக வழங்கிய ஆய்வேடுகளை இன்று கண்ணுறும்பொழுது நமக்கு மலைப்பும் வியப்பும் மேலிடுகின்றன. ஆனால் இன்றைக்கு ஒப்படைக்கப்படும் பல்வேறு ஆய்வேடுகளை யான் மதிப்பிடும்பொழுது ஆய்வுகள் மேம்போக்காக ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படுவதை உணர்கின்றேன்.
இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து வந்து அண்மையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவு செய்துள்ள ஆய்வாளர் திருமதி சி.சுப்புலட்சுமி அவர்களின் ஆய்வு நோக்கம் பாராட்டத்தகுந்தது. அவர்தம் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் ஆய்வுக்காக அவர் உழைக்கும் உழைப்பையும் கடந்த ஓராண்டாக உற்றுநோக்கி மகிழ்கின்றேன்.
தமிழ் எழுத்துகளையும். தமிழ் நெடுங்கணக்கையும் சிதைக்கப் பொறியாளர்கள் சிலர் பொறிவைத்து உழைக்கும் இந்த நாளில் தமிழ் எழுத்துகளைத் தொடக்க வகுப்பு மாணவர்கள் எவ்வாறு எழுதப் பழகினால் விரைவாகக் கற்றுக்கொள்ளமுடியும் என்ற நோக்கில் ஆய்வாளர் சி.சுப்புலட்சுமி அவர்கள் தம் ஆய்வுக்குரிய தரவுகளைத் திரட்டி வருகின்றார். இது குறித்த கலந்துரையாடல் அண்மையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்களின் தலைமையில் நடந்தது. அது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு:
சென்னைப் பல்கலைக்கழகத்தில் "எழுத்துகள் அறிமுகம் சிக்கல்கள் தீர்வுகள்" என்னும் தலைப்பில் திருமதி சி. சுப்புலட்சுமி அவர்கள் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளார். நெறியாளர் முனைவர் ஒப்பிலா மதிவாணன்.
சிங்கப்பூர் நாட்டினரான திருமதி சி. சுப்புலட்சுமி அவர்கள் தொடக்கப்பள்ளி நிலையில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முதல்வகுப்பு பிள்ளைகளுக்கு எழுத்துகளை நெடுங்கணக்கு முறையில் அறிமுகம் செய்வதா? (அ, ஆ, இ, ஈ....... முறை) அல்லது நேர்க்கோட்டு வரிவடிவ முறையில் அறிமுகம் செய்வதா? என்பது குறித்து முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆய்விற்காக அவர் கடந்த ஓராண்டு காலமாக அவ்வப்போது தமிழகம் வந்து கல்வியாளர்களையும், தமிழறிஞர்களையும், பாடத்திட்டத் தயாரிப்பில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களையும் சந்தித்து நெடுங்கணக்கு முறையில் மாணவர்களைப் பரிசோதிப்பதற்காகப் புதியகருவிநூலை உருவாக்கியுள்ளார். இப்பாடநூல் பல கல்வியியல் பேராசிரியர்கள், மொழியியல் அறிஞர்கள், உளவியல் அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவி நூல் எதிர்வரும் சூன் மாதம் 1 முதல் தமிழகத்தில் உள்ள தெரிவுசெய்யப்பெற்ற சில தொடக்கப்பள்ளிகளில் முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும். எத்துணை மாணவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்துவது, எந்த மாதிரியான பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது எத்துனை நாட்கள், எத்தனை மணிநேரம் பாடம் நடத்துவது, மாணவர்களின் அடைவுத்திறனை எந்தெந்த வகையில் பரிசோதிப்பது முதலான பல்வேறு தெளிவுகளுக்காக 07.11.2012 அன்று காலை சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் டாக்டர் பொற்கோ அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பின்வரும் மொழியியல், இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் திறன்பெற்ற தமிழறிஞர்களும் கல்வியியல் பேராசிரியர்களும், பள்ளிஆசிரியர்களும் கலந்துகொண்டு கருத்துரைத்தனர்.
1. முனைவர் பொற்கோ
முன்னைத் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்
2.முனைவர் வ. ஜெயதேவன்
முதன்மைப் பதிப்பாசிரியர், பேரகராதித் திருத்தத் திட்டம், சென்னைப் பல்கலைக்கழகம்
3. முனைவர் நா. அருணாச்சலம்
கல்வியியல் பேராசிரியர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
4. முனைவர் தங்க மணியன்
தமிழ்ப் பேராசிரியர் (பணிநிறைவு), மைசூர் பல்கலைக்கழகம்
5. புலவர் கி.த. பச்சையப்பன், சென்னை
6. முனைவர் அ. திருநாவுக்கரசு, முதல்வர், சோழன் கல்வியியல் கல்லூரி
காஞ்சிபுரம்
7. முனைவர் பா. கிருட்டிணமூர்த்தி, கல்வியியல் பேராசிரியர், வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை.
8. நி. அன்பழகன், பட்டதாரி அறிவியல் ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உத்திரமேருர்
9. க.செ. தண்டபாணி, இடைநிலை உதவிஆசிரியர், திருவொற்றியூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, எண்ணூர், சென்னை - 600 057.
10. முனைவர் ஒப்பிலா மதிவாணன், உதவிப் பேராசிரியர், தொலைநிலைக் கல்விநிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை - 600 005.
ஆய்வர் சி. சுப்புலட்சுமி அவர்கள், தொடக்கத்தில் ஆய்வுத் திட்டம், ஆய்வின் நோக்கம், ஆய்வின் கருதுகோள், இந்த ஆய்வு நிகழ்த்தப்பட வேண்டியதன் இன்றியமையாமை, கடந்தகாலங்களில் ஆய்வுக்காகச் சந்தித்துப் பேசிய அறிஞர்கள், இதுவரை நேர்காணல் செய்யப்பட்டவர்களின் விவரம் முதலானவற்றைக் காட்சியகப்படுத்தி விளக்கிப் பேசினார்கள். அதன் பின்னர், அறிஞர்களின் கருத்துரை அமைந்தது.
நெடுங்கணக்கு வரிவடிவமுறையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பான முறையில் பாடநூல் தயாரிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு அறிஞர்கள் பாராட்டினர்.
நன்றி: http://muelangovan.blogspot.in/