மதுரை மீனாட்சிக்கும், சொக்கநாதருக்கும் விமரிசையாக நடந்தது திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று காலை நடந்தது. காலை 9.17 மணியிலிருந்து 9.41 வரை முகூர்த்த நேரமாகும். திருக்கல்யாணத்தையொட்டி பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. திருமண வைபவம் நடைபெற்ற ஆடி வீதி முழுவதும் பக்தர்கள் வசதிக்காக குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது.
காலை சரியாக 9.41 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தேறியது. சொக்கநாதராக செயல்பட்ட பட்டர், தாலியை எடுத்துக் கொடுக்க அதை மீனாட்சி அம்மனாக செயல்பட்ட பட்டர் அம்மன் கழுத்தில் அணிவித்தார். இதை நேரடியாக பல ஆயிரம் பக்தர்கள் கண்டு களித்தனர். மேலும் பெண்கள் அந்த சமயத்தில் தங்களது தாலிக் கயிற்றையும் புதிதாக மாற்றிக் கொண்டனர்.
திருக்கல்யாணத்தையொட்டி கோவில் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் நகரிலும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
நேற்று மதுரையில்,வெடிகுண்டுச் சம்பவம் நடந்ததால், திருக்கல்யாண வைபவத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் கோவில் முழுவதும் போலீஸார் வெடிகுண்டுச் சோதனை உள்ளிட்டவற்றையும் நடத்தினர்.