உடல் மெலிய நாடாப்புழுவை நாடுவது ஆபத்து… நிபுணர்கள் எச்சரிக்கை
மாறிவரும் உணவுப்பழக்கம்... முறையற்ற தூக்கம் போன்றவை உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. கண்டதையும் சாப்பிட்டுவிட்டு குண்டான பின்னர் உடல் எப்படி மெலியவைப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
டயட் என்ற பெயரில் உடல் மெலிய மேற்கொள்ளும் நடைமுறைகள் கடைசியில் உயிருக்கே உலைவைத்துவிடும். கண்ட கண்ட மாத்திரைகள், பொடிகள் என சந்தையில் விற்பனை செய்வதை வாங்கி குடித்து கடைசியில் பக்கவிளைவுகளுக்கு ஆளாகிவிடுகின்றனர்.
உடல் மெலிய எத்தனையோ வழிகள் உள்ளன. சாப்பாட்டை தவிர்க்கலாம்; கொழுப்பு சத்துள்ள உணவை தவிர்க்கலாம்; உடற்பயிற்சி செய்யலாம்; அளவோடு சாப்பிடலாம். ஆனால் ஆபத்தான முறைகளில் உடல்களை மெலிய செய்யும் நடைமுறைகளை கடைபிடிக்கின்றனர் அவற்றை படியுங்களேன்.
குடலை வெட்டி ஒட்டுதல்…
சிறுகுடலை வெட்டி எடுத்து, பெருங்குடலுடன் இணைத்து, உணவின் சத்து உடலில் சேரவிடாமல் செய்கின்றனர்.
கொழுப்பை உறிஞ்சி…
சிலர் தோலுக்கடியில் இருக்கும் கொழுப்பை "லெபோ சக்ஷன்' சிகிச்சையில் உறிஞ்சி எடுக்கின்றனர். இதில் தோல், வயதானவர்கள் போல தொய்ந்துவிடும். பிறகு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் தேவைப்படும்.
நாடாப்புழு சிகிச்சை
குடல் புழுக்களிலேயே அருவருக்கத்தக்கது "நாடாப்புழு". 20 அடி முதல் 30 அடி நீளம்வரை இருக்கும். இவை நாம் சாப்பிடும் சத்தை உறிஞ்சுகிறது என்றுகூறி, இவற்றையே உயிரோடு சாப்பிடுகின்றனர்.
உயிருக்கு ஆபத்து
சில நிறுவனங்கள் நாடா புழுக்களின் முட்டைகளை உடல் மெலிய வைக்கும் "கேப்ஸ்யூல்'களில் அடைத்து, விற்பனை செய்கின்றன. உடல் மெலிய அவற்றை வாங்கி சாப்பிடும் மக்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடுகிறது. இந்த நாடாப்புழுக்களின் முட்டைகள், உடலின் எல்லா பாகங்களுக்கும் பரவுகிறது. கடைசியில் மூளை, தசையை தாக்கி உயிரைக் கொல்கின்றன.
உயிர்கொல்லி ரசாயனங்கள்
உடலை மெலிய வைக்கும் பவுடர்களில் ‘சிபுடிரமின்' என்ற ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. இது, மூளையில் உள்ள பசியைத் தூண்டும் உணர்வை கெடுத்துவிடும். இதனால் பசி என்பது மறந்து போய் நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.
முதிய தோற்றம்
இந்த "சிபுடிரமின்' உலகளவில் தடை செய்யப்பட்ட மருந்து. ஆனால் கள்ளச்சந்தையில் ஏமாறும் மக்களுக்காக, திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது. உடலை மெலியச் செய்யும் இந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் கன்னத்தில் குழிவிழுந்து, இளம் வயதிலேயே முதிய தோற்றத்தை அடைய நேரிடும்.
அசைவ உணவு வேண்டாமே
உடல் மெலியவேண்டும் என்று நினைப்பவர்கள் சாப்பிடும் அளவை படிப்படியாக குறைக்க வேண்டும். அசைவ உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்களை அளவோடு சாப்பிட வேண்டும்.
உடற்பயிற்சி செய்யலாம்…
காலை, மாலையில் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். வீட்டு வேலை செய்தால் போதுமானது என்று விட்டு விடக்கூடாது. உடல் உழைப்புவேறு; உடற்பயிற்சி வேறு. எனவே உடல் மெலிய கண்டதையும் செய்யாமல் சரிவிகித சத்துணவுகளை உட்கொண்டு உடற்பயிற்சி செய்தாலே போதும் என்கின்றனர் நிபுணர்கள்.