உன் இமைகளின் ஒரத்தில்...!
உணர்வுகள் இப்படிப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று வரையறை இல்லை. எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம் - ஆனால் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். ஒப்புக்கும், பாசாங்குக்கும் இருந்தால் அது உணர்வு அல்ல.
வெட்ட வெளி வானத்தைப் பார்க்கும்போது யாருக்குமே எந்த உணர்வும் தோன்றாது. அதுவே காதல் வயப்பட்டவர்களாக இருந்தால் அந்த வானத்தில்தான் எத்தனை ஜாலம் .. மேகமெல்லாம் மனம் கவர்ந்த பெண் ரூபத்தில் தெரியும்.. சுட்டெரிக்கும் சூரியனோ, கோக கோலா போல ஜில்லென்று தெரியும்... அதுதான் உணர்வு.
எது காதல்?... நிறைய பேருக்கு இது சரியாக புரிவதில்லை, தெரிவதில்லை. ''எந்த இடத்திலும், எந்த ஒரு சூழலிலும் மாறாமல், ஒரே வீரியத்துடன், ஒரே வேகத்துடன் அன்பு செலுத்துவதே காதல் என்று கூறுகிறார்'' எல்பர்ட் ஹப்பர்ட் என்ற அறிஞர்.
உண்மைதானே... உன்னை விரும்புகிறேன் என்று சொன்ன நாள் முதல் இறுதி மூச்சு வரை அதே வார்த்தையைப் பிடித்துக் கொண்டிருந்தால்தானே அது உண்மையான காதலாக இருக்க முடியும்.. உண்மையில் இந்தக் காதல்தானே அந்த உயிரையும் கூட பிடித்து வைத்திருக்கிறது!.
''உன் இதயத்தில் இடம் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை
உன் விழியின் ஓரத்தில் ஒதுங்க இடம் கொடு
உன் கண்களைப் பார்த்தபடி இருந்து விடுகிறேன்...''
நம்மில் பலரும் நினைக்கிறோம்.. நமது மனதைப் புரிந்தவர்கள்தான் நமக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்று. எல்லோருமே அதைத்தானே விரும்பவும் செய்கிறோம். ஆனால் உண்மையான பொருத்தம் எது தெரியுமா.. நீங்கள் நேசிக்கும் நபர் கண்ணாடி போல இருக்க வேண்டும் என்பதே. நீங்கள் நினைப்பதை அப்படியே பிரதிபலிப்பதே உண்மையான மனப் பொருத்தமாகும்.
''டேய்'' என்று அவள் நினைக்கும்போது அவன் ''ஹலோ'' சொல்ல வேண்டும். என்ன செய்கிறாய் என்று மனதுக்குள் கேட்கும்போது ''உன்னையே நினைக்கிறேன்'' என்று சொல்ல வேண்டும். மொத்தத்தில் ''எள்'' என்றால் எண்ணெய் ஆக இருக்க வேண்டும்...அதுதான் உணர்வு, அதுதான் காதல்.
''ஒரு தென்றல் போல வந்தாள்..
திங்கள் போல மனதில் நின்றாள்...
செவ்வாய் இதழ் விரித்து
புன்னகை பூவாய் சிரித்தாள்...
வெள்ளியின் ஜில்லிப்பை குரலில் காட்டி
என்னை ஞாயிறு போல
சூடாக்கிச் சென்றாள்...
குளிர்விக்க மீண்டும் வருவாயா...?''
காதல் எல்லோருக்கும்தான் வருகிறது. ஆனால் வருகிற எல்லாமே காதலா என்றால் தெளிவான பதில் கிடைப்பதில்லை. மனதை மட்டுமே நேசித்து, மனதோடு பேசி, மனதை வருடி, மனதுடன் உறவாடி, மனதோடு உறைந்து போய், மனசே உயிராக மாறிப் போய் மருகி நிற்பதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும்...
மடியில் படுத்து வானம் பார்த்தபடி கிறங்கிக் கிடப்பது மட்டும் காதல் அல்ல... மனதுக்குள் நிரந்தரமாக இடம் பிடிப்பதுதான் உண்மையான காதல். உதடுகளையும், இன்ன பிற உறுப்புகளையும் பார்த்துப் பார்த்து ரசிப்பது காதல் அல்ல, இதயத்தை தழுவி வருடி ஆறுதல் தருவதும், பெறுவதும்தான் உண்மையான காதல்.
''ஒவ்வொரு முறை பூவைப் பார்க்கும்போதும்
உன் முகமே தெரிகிறது..
ஆனால் மனதின் ஓரத்தில் ஒரு கேள்வி எப்போதும் தொக்கியே நிற்கிறது
நீ 'அல்லி'யா இல்லை.. என் மனம் குதறிப் போக வந்த 'வில்லி'யா...!
குத்திக் குதற என் உயிர் 'முனியாண்டிவிலாஸ்' அல்ல..!
அது உன் உயிர்...
எனவே 'உன்னை'க் கொல்லாதே...''
காதல் என்றாலே அப்படித்தானே... ஒருவர் கொல்லாமல் கொல்வார்... இன்னொருவர் ரசித்தபடி அதை அனுபவிப்பார்... ஆனால் ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும், காதல் நிச்சயம் வாழ வைக்கும்.. யாராவது ஒருவரை மட்டுமாவது!