வெறி பிடித்த பாலியல் வன்முறைக்கான தீர்வு தான் என்ன?
பாலியல் வன்முறை நிகழ்வுகளை பத்திரிகை செய்திகளாக்கும்போது அதை படிக்கும்போதும் பார்க்கும்போதும் மனசு பதறுகிறது. ஐயோ என்று உச்சு கொட்டுகிறோம். அப்புறம் குற்றவாளியை கொல்லணும், தூக்கிலிடணும் என்று சத்தமா சொல்லுவோம் . அப்புறம் என்ன அடுத்த செய்தி வரும். அந்த செய்திக்கிடையில் இந்த குற்றவாளி என்ன ஆனான். அந்த வழக்கு என்ன ஆச்சு என்று நாமும் பேசுவதில்லை. ஏன் பெரும்பாலும் பத்திரிகைகள் கூட அதை தொடராமல் அடுத்த செய்திக்குள் போய் அடுத்த பரபரப்பை பரப்பிக் கொண்டிருக்கும். நாமும் அடுத்த செய்தியில் நம்மை தொலைத்திருப்போம்.
இந்த மாதிரி மனதை பதற வைக்கும் பாலியல் வன்முறைக்கான தீர்வு தான் என்ன?. இது காலம் காலமா நடந்து வருகிறதே அதை தடுக்காவிட்டால் கூட குறைக்கிற அளவுக்காவது ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதிலும் இப்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் கூடி வருகிறதே இன்னும் இன்னும் அதிகமாக. இது ஒரு கொடுமை இல்லையா. மொட்டுக்கள் மலரும் முன் அதை கசக்கி எரிகிற ஒரு காமுக சமூகத்தில் நாம் வாழ்வது கேவலம் . அந்த குழந்தைகள் இங்கு பிறந்தது தான் பாவமா ? அவர்கள் உலகை புரிந்து கொள்ளும் முன் வக்கிர புத்திக்காரர்களின் வன்கொடுமை காரணமாக பூக்கும் முன்பே புதைந்து போகிறார்கள்.
பொள்ளாச்சி சம்பவம் ஏற்படுத்திய வலியே இன்னும் மனசுக்குள் ஓயவில்லை. அது எப்படி ஏழு வயது சிறுமியை ஒருவன் தன் தேவைகளுக்காக .... கடவுளே கொலையும் செய்து. எப்படி எழுகிறது ஒரு சாதாரண மனிதனுக்குள் இத்தனை வக்கிர எண்ணங்கள். எப்படி இவன் மிருகமாக மாறுகிறான் . இதெயெல்லாம் அலசி சீர்படுத்த வேண்டாமா. முயற்சிகளாவது மேற்கொள்ள வேண்டாமா?
எங்கு தொடங்குகிறது இந்தப் பசி . மனிதனுக்கு வெகு இயல்பான இந்த உடல் பசி இயற்கை அவனோடு இணைத்தது. அதற்கு தான் கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை என்ற கட்டுப்பாடு எல்லாம். ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தான் நம் பண்பாடு என்று சொல்லி வளர்க்கப்பட்ட நம் தலைமுறையில் நம் இனத்தில் இத்தனை பாதகங்கள் வெகு சாதாரணமாக நடந்தேறுகிறது.
தனக்கு செலவழிக்க காசில்லாத போது தான் ஒருத்தனுக்கு அடுத்தவன் பையில் கை வைக்க தோன்றும். தன் பசிக்கு உணவில்லாத போது தான் அடுத்தவன் பானையில் கையைப் போடுவான். இதுவும் அப்படித் தான். பசி பற்றி எரியும் போது அடுத்தவன் தோட்டத்தில் மேயத் தோன்றும். ஒற்றுமையான மனம் இயைந்த நல்ல குடும்ப வாழ்க்கை எல்லா இடங்களிலும் இருக்கும்போது இது போன்ற சம்பவங்கள் குறைய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.
சில இடங்களில் வயது முதிர்ந்த மனிதர்கள் இதுமாதிரி காரியங்களில் ஈடுபடுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கான காரணம் என்ன என்று அலசிப் பார்த்தால் கூட காரணம் மேலே சொன்னதாக தான் இருக்கும். அதுவும் காலம் கடந்தும் இவர்களின் அடங்கா ஆசைக்கு அவர்கள் பயன்படுத்திக்கொள்வது என்னவோ சின்ன சின்ன குழந்தைகளை தான். குழந்தைகள் பயத்தாலோ அல்லது புரிதல் இல்லாததாலோ வெளிய சொல்லாமல் இருப்பதை தங்களுக்கு சாதகமாகிக் கொள்கிறார்கள். இது போன்றவர்களிடம் மாட்டிக்கொள்ளாம இருக்க தான் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் அதாவது பாதுகாப்பான தொடுதல் பாதுகாப்பற்ற தொடுதல் என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கிறோம்.
இந்த வன்கொடுமைகளுக்கு ஓன்று அரபு நாடுகளை போல குற்றவாளிக்கு மரண தண்டனை என்று கொண்டு வந்தால், பயத்தில் தவறுகள் குறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஒருத்தனுக்கு கொடுக்கும் தண்டனை இன்னொருவனை தவறு செய்ய தோன்றினாலும் அதைச் செய்ய விடாமல் பயப்படுத்த வேண்டும். அந்த அளவுக்கு தண்டனைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
ஓன்று இந்த மிருகங்களை கொல்ல வேண்டும். இல்லையா எதற்கு இந்த அதீத பசி அதற்கான காரணங்களை ஆராய்ந்து சமூகத்தை சரி பண்ணுங்க. .இல்லையா மிருகங்களுக்கு பசிக்கு தீனியை போட்டு விட வேண்டும். பசிக்கு உணவகம் திறப்பது போல இந்தப் பசிக்கும் ஆங்காங்கே திறந்துவிடுங்கள். தேவையானவர்கள் அங்கு போய் தங்கள் தேவையை தீர்த்துக் கொள்ளட்டும்.
- Inkpena சஹாயா