கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்றது இளங்கலை தமிழியல் பட்டமளிப்பு விழா
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் இளங்கலை தமிழியல் பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் 9வது இளங்கலை தமிழியல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழா அக்கழகத்தின் தலைவர் அ. இராமன் தலைமையில் நடைபெற்றது. மலேசிய அரசின் நலத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் விழாவைத் தொடங்கி வைத்தார்.
காலை நிகழ்வில் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், காரைக்குடி பேராசிரியர் எம்.பாண்டி, மதுரை வானொலி இளசை சுந்தரம் ஆகியோர் இலக்கியப் பேருரைகள் நிகழ்த்தினர்.
பிற்பகல் நிகழ்வில் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ மு.சரவணன், பட்டமளிப்பு விழா மலரை வெளியிட்டார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சான்றோர்களுக்கு விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினர்.
மாலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், கல்வித் துறை துணை அமைச்சர் பி.கமலநாதன் பேசினார். பின்பு, இளங்கலை தமிழியல் தேர்வில் வெற்றி பெற்ற 65 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
மலேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சு.குமரன், அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.பாண்டி, கலைமாமணி இளசை சுந்தரம் ஆகியோரைத் தொடர்ந்து, பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவில் துணைத் தலைவர் ந.பொன்னுசாமி, துணைப் பொதுச் செயலாளர் கரு.பன்னீர்செல்வம், பாடத் திட்டக் குழுத் தலைவர் போகையா முனியாண்டி, கரப்பார் நடுவப் பொறுப்பாளர் மு.சுப்பிரமணியம், பொருளாளர் பழனி பாரதி, வ.நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.