தமிழக கிராமங்களில் 1330 திருக்குறள் அறிவுத்தலங்கள்! – டாக்டர் ராஜனின் புதிய முயற்சி
டல்லாஸ் (யு.எஸ்): தமிழகம் மற்றும் புதுவையில் 1330 கிராமங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு திருக்குறளின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் 'திருக்குறள் அறிவுத்தலங்கள்' உருவாக்க வேண்டும் என்றுமேரிலாண்ட் துணைச்செயலாளர் டாக்டர் ராஜன் நடராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த போது, அறக்கட்டளையின் இயக்குனர் வேலு ராமன் மற்றும் முக்கிய தன்னார்வத் தொண்டர்களிடம் இது குறித்து தெரிவித்தார். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திருக்குறள் போட்டிகள் மூலம் உலகெங்கும் திருக்குறளை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற விருப்பம் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக வேலு ராமன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து டாக்டர் ராஜன் ஆலோசனை செய்து வருகிறார்.
திருக்குறள் சுற்றுலா
1330 திருக்குறள் அறிவுத் தலங்கள் அமைப்பது மிகவும் சவாலானது என்றாலும் வெளிநாடு வாழ் தமிழர்களின் தாய் நாட்டு பற்றினால், இது சாத்தியமே என்று தெரிவித்தார். தமிழக கிராமங்களை திருக்குறள் மூலம் இணைப்பதனால் சுற்றுலா வாய்ப்புகள் பெருகும். உலக அளவில் திருக்குறளுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்த அறிவுத்தலங்கள் அமையும்.
வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும். காலப்போக்கில், எத்தனை திருக்குறள் அறிவுத்தலங்கள் சென்றுள்ளீர்கள் என்ற அளவுக்கு மக்களில் வாழ்வில் ஒன்றிப்போகும் என்று டாக்டர் ராஜன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அறநெறியில் வாழ்வதற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய திருக்குறளை, அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கும் இந்த அறிவுத்தலங்கள் பெரும் பங்களிக்கும், படிக்காதவர்களுக்கு கூட திருக்குறளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை உருவாக்கும் எனவும் அவர் கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தின் மூலம் 1330 கிராமங்களும் வளர்ச்சி அடையும்.
வெளிநாடு வாழ் தமிழர்கள்
வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பங்காற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள். இது போன்ற நல்ல திட்டங்களுக்கு அவர்களே முன்வந்து பங்காற்றுவார்கள் என தான் நம்புவதாகவும் டாக்டர் ராஜன் தெரிவித்தார். இதன் மூலம் தாங்கள் பிறந்து வளர்ந்த கிராமங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கு இந்த திட்டம் ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது என்றார்.
தமிழகம் மற்றும் புதுவை யில் 1330 திருக்குறள் திருத்தலங்கள் அமைவது சர்வதேச அளவில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் முயற்சியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.