அம்மா ...அம்மா...!
எந்த புள்ளியிலிருந்து எடுத்தாய்
இந்த அவதாரத்தை
பந்தம் தேடிய திருமணத்தில்
பாதம் பதித்து இருப்பாய்
வெட்கங்கள் குடியேறி
கன்னங்கள் சிவந்தே சுற்றி இருப்பாய்
தாய் தந்தையின் திசை நோக்கி
தவித்து இருப்பாய்
அண்டை வீட்டு
பையனையும் பெண்ணையும்
பார்க்கையில் சகோதரப் பாசத்தில்
கரை புரண்டு ஓடி இருப்பாய்
புது உறவுகளின் புது மரியாதையுடன்
புது குணம் பற்றிக் கொள்ள
பிறந்த வீடு புகழ் பாடி இருப்பாய்
அறிவுரைகளின் சுனாமியால்
தாக்கப் பட்டு பயந்தும் நடுங்கி இருப்பாய்
பின்பு எங்கிருந்து புறப்பட்டது
அன்பு சுனாமி
இரத்தம் உறைந்து
உன் இரத்தம் உதித்த செய்தி
கேட்டத் தினத்திலிருந்தா
வாந்தி மயக்கத்தில்
உடல் தளர்ந்து சரிந்து கிடக்க
உறவுகளையும் உலுக்கிய
தினத்திலிருந்தா
இடை அகன்று
மூச்சும் பின் வாங்க
சுமைக்குள் சுகம் உண்டான
தினத்திலிருந்தா
உடல் சூட்டை குறைப்பதிலும்
சுரம் வராமல் தடுப்பதிலும்
நித்தமும் பிரசவ யுத்தம்
போட்ட தினத்தில் இருந்ததா
முகச்சாடையும் நிறமும்
மற்றவர்கள் பார்க்க
பனிக்குடத்து சிறையிலிருந்து
மீட்டெடுத்த போர் வீரனாய்
வெற்றிக் களிப்பில் மிளிர்ந்த
தினத்திலிருந்தா
எதிர்ப்பார்ப்பு வலை கிழித்து
எரிபொருளாய் தீய்ந்து போனாய்
பொறுமை மேகத்தைச் சூடி
அன்பை மழைத் தேடி தவம் கிடந்தாய்
உயிரை உருக்கி ஊன் வளர்த்தும்
பெரும் பேச்சு வாங்கினாய்
பிறந்தோம் என்று இல்லாமல்
தங்கமான நீ உன்னையே
உருக்கி உருக்கி சொலித்து
கொண்டிருந்தாய்
என்னைக் கேட்டா பெற்றாய்
நான் கேட்ட என்ற கேள்விகள்
எதிர்மறையாய் என் முன்னே
விடைத் தெரியாத கேள்வியை கேட்டு
அடம் பிடிக்கிறது
நாலு கைத்தட்டலிலும்
பரிசுகளிலும்
பெருமை பட்டு கொள்ளும்
இந்த முகத்தைப் பார்த்தவர்களுக்கு
தெரியாது
காலம் கடந்து
முகமூடி கழற்றி
அம்மா அம்மா என்ற மந்திரத்தை
உச்சரிக்கையில்
என் அழுகையையும் சிரிப்பையும்
உள்வாங்கும் அட்சயப் பாத்திரம்
இன்றும் தேடுகிறேன்
எந்த புள்ளியிலிருந்து எடுத்தாய்
அம்மா என்ற அவதாரத்தை
-சிவமணி
வத்தலக்குண்டு