பொதுத் தேர்தலில் பிரதிபலிக்குமா இடைத் தேர்தல் முடிவுகள்?
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் முடிவுகள் அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது என்பது மறுக்க முடியாது உண்மையாகும். கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி விட்டும், திமுக தலைமையிலானவலுவான ஏழு கட்சி கூட்டணியை முறியடித்து விட்டும், அதிமுக அதிக ஓட்டுக்களைப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளதுஎதிர்க்கட்சிகளையும்அதிர்ச்சி வைத்தியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில்அதிமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்ற போதே எதிர்க்கட்சிகள் சற்று சுதாரித்துக் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும்.என்னதான் ஆளும் கட்சியிடம் படை பலம், பண பலம் என்று கூறினாலும் அதை எதிர்த்து நிற்க எதிர்க்கட்சிகளிடம் போதுமானதேர்தல் வியூகம் இல்லாமல் போனது ஏன்?
இந்த இடைத் தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதைச் சற்று ஆராய்வோம்.
இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி என்பது இயல்பா ஒன்று என்று இதை ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஆட்சிக்கு வந்துநான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில், இன்னும் ஒரு ஆண்டுக்குள் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையில் அதுவும்பாராளுமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியைச் சந்தித்த ஒரு சூழ்நிலையில், அதிமுக இவ்வளவு கூடுதலான ஓட்டுக்கள் பெற்றுவெற்றி பெற முடிகின்றது என்றால் அதற்கு என்ன காரணம்?
முதலில் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளின் பலத்தையே முழுமையாக நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. இந்தத் தேர்தலில் திமுகவாங்கியுள்ள ஓட்டைச் சற்று கூர்ந்து அலசி ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படும். சென்ற ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில்காஞ்சிபுரம் தொகுதியில் திமுக பெற்ற வாக்குகள் 80,875. தற்போதைய இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகள் 69,696. சுமார்11,000 வாக்காளர்கள் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து விட்டு ஒரு ஆண்டுக்கள் தங்களது முடிவை மாற்றிஇருக்கிறார்கள் என்பது புலனாகின்றது.
இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். திமுகவிற்கு நிரந்தரமாக உள்ள ஓட்டு வங்கி வாக்குகள் ஏறத்தாழ 55,000 வாக்குகள்அப்படியே திமுகவுக்கு பதிவாகி இருக்கின்றன. கூட்டணிக் கட்சிகளின் பலமாக மேலும் 15,000 வாக்குகள் ஓட்டுக்கள் விழுந்துஇந்த இடைத் தேர்தலில் சுமார் 70,000 வாக்குகளை திமுக பெற்றுள்ளது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் மூலமாக வர வேண்டியசுமார் 15,000 ஓட்டுக்கள் காணாமல் போய் விட்டது!
கும்மிடிப்பூண்டி தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திமுக 78,201 ஓட்டுக்கள் வாங்கி இருந்தது. ஆனால் இந்ததேர்தலில் திமுகவுக்கு 56,554 ஓட்டுக்களே கிடைத்துள்ளது. இவ்வோட்டுக்களில் கணிசமானவை திமுகவின் நிரந்தர ஓட்டுவங்கிக்குரியவை. நிரந்தர ஓட்டு வங்கியிலும் சற்று விலை போயிருக்கலாமோ என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது.
திமுகவின் நிரந்தர ஓட்டைத் தவிர மற்றவர்கள் மாற்றி வாக்களித்து இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கலாம்? இன்னும் ஒருஆண்டுக்குள் சட்டமன்றத் தேர்தல் வந்து விடும் என்பதாலும், எதிர்க்கட்சிக்கு ஓட்டுப் போட்டுட எந்த ஒரு பலனும் ஏற்படப்போவதில்லை என்பதாலும் ஆளுங்கட்சிக்கு போட்டால் ஏதாவது பயன் கிட்டும் என்ற நம்பிக்கையிலும் ஓட்டு மாற்றிப்போட்டிருக்கலாம். மேலும் பல உள் மற்றும் வெளி வேலைகளின் தாக்கமும் காரணமாக இருக்கலாம். எது எப்படி இருப்பினும்ஒரு உண்மையை உரக்கக் கூறுகின்றது இந்த இடைத் தேர்தல் முடிவுகள்.
திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் ஓட்டு வங்கியிலிருந்து சுமார் 50 சதவீதம் வாக்குகளைத் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ளும்ஆற்றல் அதிமுகவிடம் இருப்பது இதன் வழியாக நன்கு புலப்படுகின்றது. பொதுத் தேர்தலில் 50 சதவீதம் முடியாவிட்டாலும்எப்படியும் 25 சதவீதம் ஓட்டுக்களைத் திருப்பி விட முயலுவார்கள். ஆக, திமுக மெத்தனமாகச் செயல்பட்டால் மீண்டும்கோட்டையை கோட்டை விட வேண்டிய நிலைக்கு ஆளாகி விடக் கூடும்.
பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசின் செயல்பாடுகள் எதிர்க்கட்சிகளினால் குறிப்பாக திமுகவினரால் கடுமையாகவிமர்சிக்கப்படவே இல்லை. கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் எப்படி எல்லாம் எந்தெந்த துறைகளில் பின்தங்கியுள்ளதுஎன்பதை ஆதாரத்துடன் மக்கள் மன்றம் முன்பு எடுத்துச் செல்ல தவறி விட்டதாகவே தெரிகின்றது. அதே சமயம், தமிழகத்தின் 12மத்திய அமைச்சர்கள் மாநிலத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று அடிக்கடி கிளிப் பிள்ளையைப் போல ஜெயலலிதாசொல்லியது மக்களிடம் எடுபட்டிருக்கின்றது.
இப்படிச் சொல்லிச்சொல்லியே ஆளும் கட்சி மீது மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியை சுலபமாக மத்திய அரசின் பக்கம் திருப்பிவிட்டு விட்டார். மத்திய அரசு திமுகவின் அரசு என்பது போல ஒரு மாயையை ஏற்படுத்தி விட்டார். விளைவு ஆளும் கட்சிக்குஎதிராக விழ வேண்டிய அதிருப்தி ஓட்டுக்கள் இரண்டு பக்கமும் சிதறியுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், சாதனைகள் எதுவும் மக்களிடம் சரியான முறையில்சென்றடையவில்லை. மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சிறந்த செயல்பாடுகள் மற்றும் அவரது சாதனைகள் வடக்கேஉள்ளவர்களே பாராட்டும் அளவிற்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் அவரது செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்தமிழக மக்களிடம் சென்று சேர்ந்ததா என்று தெரியவில்லை. அதுபோலவே தமிழகத்தின் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம்,அன்புமணி, டி.ஆர். பாலு போன்றவர்களின் உழைப்பும், செயல்பாடும் மக்கள் மன்றத்தில் உரிய முறையில் கொண்டு போய்சேர்ப்பதில் கோட்டை விட்டு விட்டனர்.சிறப்பாக செயல்படும் இவர்களின் நிலையே இப்படி என்றால் தமிழகத்தின் மற்ற மத்தியஅமைச்சர்களின் நிலையோ பரிதாபத்திற்குரியது. அவர்களின் பெயர்களே வெளி உலகுக்குத் தெரியவில்லை.
ஜெயா தொலைக்காட்சி, ஆளும் அதிமுகவிற்குப் பிரசார பீரங்கியாச் செயல்படுகின்றது. அதே சமயம், சன் டிவி திமுகவிற்குஆதரவாக இருந்தாலும் அது அதிமுகவின் ஜெயா டிவியைப் போல
செயல்படுவதில்லை. திமுகவிற்கு கட்சியின் அதிகாரத்துவ தொலைக்காட்சி ஒன்று இல்லாதது மிகப் பெரிய குறையாகும்.உடனடியாக திமுக தனது கட்சி சார்பு தொலைக்காட்சி ஒளிவழி ஒன்றைத் தொடங்கினால் மட்டுமே தலைவர்களின் சாதனைகள்மற்றும் பிரசாரம் மக்கள் மன்றத்திற்கு விரைவில் சென்று சேரும்.
தமிழகத்தைப் பொருத்தவரையில், ஆளும் கட்சியான அதிமுகவில் ஜெயலலிதாதான் ஒன் வுமன் ஆர்மி! ஜெயலலிதாதான்எல்லாம் என்பதால், மக்கள் மற்ற மாநில அதிமுக அமைச்சர்களைச் சட்டை செய்வதில்லை. அதிமுக அமைச்சர்களும் மக்களைச்சட்டை செய்வதில்லை. ஏன் என்றால் மறு நாள் மந்திரியா என்று அவர்களுக்கே தெரியாது. முதல் நாள் இரவே நீ "எந்திரிய்யா"என்று கூறும் நிலையில் அவர்களின் நிலை உள்ளது. எனவே அவர்களிடம் இருந்து யாரும் எதையும் பெரிதாகஎதிர்பார்ப்பதில்லை. இதை எல்லாம் எதிர்க்கட்சிகள் முறையாக மக்களிடம் எடுத்துச் சென்று விளக்கியதா என்றால் அதுவும்இல்லை என்றே கூற வேண்டும்.
இந்த இரு தொகுதிகளின் இடைத் தேர்தலில் காட்டியஅதேஅளவு பண பலம் மற்றும் பலப் பிரயோகத்தைப் பொதுத் தேர்தலில்ஆளும் அதிமுக தமிழகம் முழுவதும் காட்ட முடியுமா என்பதும் கேள்விக்குறியே! எது எப்படி இருப்பினும், இந்த இடைத் தேர்தல்முடிவுகள் அதிமுகவிற்கு ஒரு புத்துணர்ச்சியையும், தெம்பையும் அளித்துள்ளது என்பதும், எதிர்க்கட்சிகளுக்க ஒற்றுமையின்அவசியத்தை அறிவிக்கும் எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது என்பதும் உண்மை!
திமுக கூட்டணியின் கட்சித் தலைவர்கள் மட்டும் ஒற்றுமையாக இருப்பதால் எந்த ஒரு பயனும் ஏற்படாது. அக்கட்சிகளின்தொண்டர்கள் வரையும், அக்கட்சிகளின் அனுதாபிகள் வரையும் அந்த ஒற்றுமை ஊடுறுவிச் செல்ல வேண்டும் என்ற உண்மையைஎதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஓங்கி ஒலித்துள்ளது இந்த இடைத் தேர்தல் முடிவுகள்.
எனவே அடுத்து வரும் பொதுத் தேர்தலைப் பொருத்தவரையில் பட்டுக் கோட்டையின் பாடல் வரிகள்தான் பொருத்தமானபதிலாக இருக்கும்.
விழித்துக்கொள்வோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்!
குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை (யை) விடுவார்!
- அக்னிப்புத்திரன்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.