2020 பிளாஷ் பேக் : ராகு கேது, குரு, சனி நவகிரகங்களும் பெயர்ச்சி ஆன 2020 - பாதிப்புகள் என்ன
2020ஆம் ஆண்டில் குரு, சனி, ராகு கேது என ஆண்டுகோள்கள் உள்ளிட்ட நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சி அடைந்தன. 12 ராசிக்காரர்களும் நன்மையும் தீமையும் கலந்த பலன்களை அனுபவித்தனர்.
சென்னை: 2020ஆம் ஆண்டு முடிந்து 2021ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. ஓராண்டு காலமாக பல பாதிப்புகளை உலக மக்கள் அனுபவித்தனர். சிலருக்கு நன்மையும், பலருக்கு தீமையும் நடந்திருக்கலாம். சிலருக்கு கிரக பெயர்ச்சிகள் சாதகமாக இருந்தாலும் தசாபுத்தி சரியில்லாமல் இருந்ததால் நிறைய கஷ்டங்களை அனுபவித்தனர். 2020ஆம் ஆண்டில் ராகு கேது, குரு, சனி ஆகிய
கிரகங்கள் இடப்பெயர்ச்சி நிகழ்ந்தது. இதனால் 12 ராசிக்காரர்களும் நன்மையும் தீமையும் கலந்த பலனை அனுபவித்தனர்.
சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு, கேது, சனி ஆகிய நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது, ஒவ்வொரு ராசியினருக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும்.
சந்திரன் இரண்டே கால் நாளில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். புதன், சூரியன் தலா 1 மாதத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். சுக்கிரன் ஒரு மாதத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார். செவ்வாய் 45 நாட்களில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையும்.
குரு ஓராண்டு, ராகு- கேது ஒன்றரை ஆண்டு, சனி இரண்டரை ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை என ஒவ்வொரு கோளும் ஒரு ராசியில் சஞ்சரிக்க எடுத்துக்கொள்ளும் காலம் வேறுபடும். குரு, ராகு, கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெறும்போது கோயில்களின் சிறப்பு பூஜைகள் மற்றும் பாதிப்பு உள்ள ராசியினருக்கு பரிகார பூஜைகள் யாகங்கள் செய்யப்படும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23 : ரிஷபத்திற்கு பாக்ய சனியால் பதவிகள் தேடி வரும்
குரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். குரு பகவான் நவம்பர் மாதத்தில் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். அதிசாரமாக குரு பகவான் 2021ஆம் ஆண்டு கும்பம் ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.
ராகு- கேது பெயர்ச்சி ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். ராகு மிதுனம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கும் கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கும் செப்டம்பர் மாதம் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர்.
சனிப் பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். திருக்கணித பஞ்சாங்கப்படி 2020ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி நிகழ்ந்தது. தனுசு ராசியில் இருந்து சனிபகவான் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். சனிபகவான் கடந்த ஓராண்டுகளில் வக்ரமடைந்தும் பின்னர் நேர்கதியாகவும் சஞ்சரித்தார். வாக்கியப்பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி வரும் 27ஆம் தேதி நிகழப்போகிறது.
இதற்கு முன் 2014, 2017 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் குரு, சனி, ராகு, கேது கிரகங்களின் பெயர்ச்சி நடை பெற்றது. 2020ஆம் ஆண்டில் முக்கிய கோள்களின் கிரகப் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இனி 2023ஆம் ஆண்டுதான் இதே போல நவ கிரகங்களின் பெயர்ச்சியும் நிகழும் என்று பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரகப் பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிக்காரர்களுமே நன்மையும் தீமையும் கலந்த பலனை அனுபவித்தனர். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்தது அதனால் கடந்த ஏழரை ஆண்டு காலமாக பட்ட கஷ்டத்தில் இருந்து விடுதலை அடைந்தனர்.
2020ஆம் ஆண்டு கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்தது. விரைய சனி நிறைய விரையத்தை கொடுத்தது. தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனி படுத்தி எடுத்தது. மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி பல சங்கடங்களை கொடுத்து அதற்கேற்ப படிப்பினைகளை கொடுத்தது.
பிறக்கப் போகும் 2021ஆம் ஆண்டில் சோதனைகள் முடிந்து நன்மைகள் நடைபெற வேண்டும் என்று எல்லா ராசிக்காரர்களும் நவ கிரகங்களையும் வேண்டிக்கொள்வோம்.