மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைபவமும் கோவிலுக்குள் நடைபெறும்
கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி மதுரை சித்திரை திருவிழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மீனாட்சி திருக்கல்யாணத்தை ஆன்லைனில் பக்தர்கள் தரிசிக்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை: கொரோனா பரவல் காரணமாக மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டும் கோவில் வளாகத்திலேயே நடைபெற உள்ளது. மீனாட்சி திருக்கல்யாணமும்,கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் கடந்த ஆண்டைப்போலவே கோவில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு பக்தர்களை கவலையடைய வைத்துள்ளது.
மதுரை என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது சித்திரை திருவிழாதான். 12 மாதமும் திருவிழா கோலம் பூண்டிருக்கும் நகரம் மதுரை. சைவ ஆலயங்களும் வைணவ ஆலயங்களும் நிறைந்த பழமையான நகரம் மதுரை. சித்திரை மாதத்தில் 12 நாட்கள் நடைபெறும் திருவிழா எதிர்பார்த்து வெளியூர்களில் வசிக்கும் மதுரைவாசிகள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
Recommended Video
மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் தொடங்கி மீனாட்சி பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கும் கள்ளழகர் என தினம் தினம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். தினம் தினம் அலங்கார வாகனங்களில் நகர்வலம் வரும் சாமி, அம்மனை காண கண்கோடி வேண்டும். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் திருவிழா சித்திரை திருவிழாவாகும்.
மதுரை சித்திரை திருவிழா
சைவ, வைணவ ஒற்றுமை பேசும் விதமாக மதுரை மீனாட்சி கோயில், அழகர்கோவில் விழாக்களை இணைத்து மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்து, சித்திரை மாதம் இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது. சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு இந்த திருவிழா நடைபெறும்.
முடக்கிய கொரோனா
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் சுவாமி சன்னதியில் உள்ள சேத்தி மண்டபத்தில் 3 சிவாச்சாரியார்களால் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடத்தப்பட்டது.
கோவிலுக்குள் அழகர்
கோவிலுக்குள் பக்தர்கள் இன்றி எதிர்சேவை, அழகர்ஆற்றில் இறங்குதல், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தது. 28 ஆம் தேதி கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகத்தில் நாளை முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சித்திரை திருவிழா கடந்த ஆண்டைப் போலவே உள்திருவிழாவாகவே நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கடந்த ஆண்டே கள்ளழகரை காணாத பக்தர்கள் கவலையடைந்தனர் இந்த ஆண்டும் கள்ளழகர் மதுரைக்கு வரமாட்டார் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கோவில் உள்ளே விழா நடைபெறும்
சித்திரை திருவிழா கோயில் வளாக உட்புறத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மதுரை ஆட்சியர் அன்பழகன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி மதுரையில் 21 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள ஸ்டிக்கரை கிழித்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.