மாசி மகம் பெருவிழா கோலாகல கொடியேற்றம் - 26ல் தெப்ப உற்சவம்
மாசிமகப் பெருவிழா இன்று கும்பகோணத்தில் உள்ள சிவ ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவிலில் மாசி மகம் தெப்ப திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
மதுரை/ கும்பகோணம்: மாசிமகப் பெருவிழா இன்று கும்பகோணத்தில் உள்ள சிவ ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவிலில் மாசி மகம் தெப்ப திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசிமகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும். பத்து நாட்கள் நடைபெறும் மாசி மகம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

21.02 .21 ஞாயிற்றுக்கிழமையன்று இரவு சிவ ஆலயங்களில் ஓலைசப்பரத்தில் ரிஷபவாகன காட்சியும், வைணவ ஆலயங்களில் ஓலைசப்பரத்தில் கருடவாகன காட்சியும் நடைபெறும். 24.02 .21 புதன்கிழமை காலை அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 26.02.21 வெள்ளிக்கிழமை மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு காலை சக்கரபாணி திருக்கோயில் தேரோட்டம் நடைபெறும்.
நண்பகல் 12.30 மணிக்கு மகாமககுளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. சார்ங்கபாணி ஸ்வாமி திருக்கோயிலில் பொற்றாமரை குளத்தில் தெப்பத்திருவிழா காலை, மாலை இரண்டு நேரங்களிலும் நடைபெறும். மகாமக குளத்தில் மாலை 06.00 மணிக்கு ஆரத்திப்பெருவிழா நடைபெறும். தேரோட்டம், தீர்த்தவாரி, தெப்பம், ஆரத்தி வைபவம் அனைத்திலும் பங்கேற்கும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் தெப்ப உற்சவம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும் , திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலப்பெருமை கொண்ட திருக்கோவிலாகவும் விளங்குகின்ற மதுரை கூடலழகர் திருக்கோயில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான மாசி மகம் தெப்பதிருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி முன்னதாக மேளதாளங்கள் முழங்கிட பூஜிக்கப்பட்ட கொடி பல்லக்கில் கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது . இதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது
விழாவில் ஏராளமானோர் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள் மற்றும் தாயாருக்கு தீபாரதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .
தினசரியும் பெருமாள் தாயாருடன் தினமும் சிம்மம், அன்னம், அனுமார் வாகனம், ஷேச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். விழாவில் பத்தாம் நாள் திருவிழாவான 26 ஆம் தேதியன்று ஏகாந்த சேவை பல்லக்கில் தெப்பமுட்டுதல் நிகழ்ச்சியும் , 27ஆம் தேதியன்று தங்க சிவிகையில் பெருமாள் புறப்பாடாகி இரவு 7.30 மணிக்கு மேல் உபயநச்சியாருடன் தெப்பசுற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதே போல திருப்போரூர் கந்தசாமி கோவிலில் மாசி மகம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஷ்வரர் ஆலயத்தில் இன்று மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications