சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் கோலகலம்... பக்தர்கள் தரிசனம்
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
சென்னை: ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு இன்று சிவ ஆலயங்களில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அனைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயங்கும் ஆண்டவனே பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன.
'பசி என்பது ஒரு பிணி' என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்ற பழமொழியும் பிரசித்தம். வயிறு பசிக்கும் போது அதற்கு உணவு கொடுக்கவேண்டும்.
பசியின்றி அனைவருக்கும் உணவு அளிக்கும் இறைவனை அன்னத்தால் அர்ச்சனை செய்வதைக் காண கண் கோடி வேண்டும் அல்லவா? ஐப்பசி மாத பௌர்ணமி தினமான நேற்று தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் நடைபெற்றதை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சொர்க்கத்தில் வாழ்வு
யாராவது உறவினர் வீட்டிற்க்கு விருந்துக்கு போன இடத்தில் நீண்ட நாட்கள் தங்க நேர்ந்தால் "சோறு கண்ட இடம் சொர்கம் ஆயிற்று" என்று வேடிக்கையாக கூறுவதுண்டு. அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? சிவன் கோயில்களில் ஐப்பசி பெளர்ணமியன்று பச்சரிசியால் ஆன வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் நடக்கும். அதை தரிசித்தால் சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பதுதான்.
அன்னையோடு அறுசுவை
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. அன்னையோடு அறுசுவை உண்டிபோம் என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.
இறைவனுக்கு அபிஷேகம்
அன்னத்தை தெய்வம் என்பார்கள். வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது அன்னதானம் மட்டும் தான். பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால், ஒருவன் வேண்டும் என்று கேட்ட அதே வாயால் போதும் என்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே.
சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம்
மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், வெள்ளீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், ஆகிய ஏழு சிவ ஆலயங்களிலு ம் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை தரிசித்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பெருஉடையாருக்கு அபிஷேகம்
தஞ்சை பெரிய கோவில் தஞ்சாவூரில் உள்ள பிரகதீஷ்வரர் ஆலயத்தில் ஆயிரம் கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட சாதத்தைக் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. காரட், பீட்ரூட், பழங்கள், காய்கறிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.
பிரகதீஸ்வரர் ஆலயம்
அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும். இங்கு 75 கிலோ எடை உள்ள, 51 மூட்டை என, 3,825 கிலோ அரிசியால் சாதம் சமைத்து, பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.
பசியின் வாழ வழி கிடைக்கும்
அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்குக் கஷ்டப்பட மாட்டார்கள் என்பது நம்பிக்கை. சிலருக்கு உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் உண்ண முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்' என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும் என்பது உண்மை.
அன்னதானம் செய்யுங்கள்
ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான, தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய் இல்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது. எனவே அனைத்து சிவ ஆலயங்களிலும் அன்ன அபிஷேகம் செய்து நம் ஊர்களை எல்லாம் வளமுள்ளதாக்குவோம்.