அனைவரும் சகோதரர்கள்தான்... சமூக நீதி கிடைக்க ஓயாமல் பாடுபடுவோம் - டாக்டர் ராமதாஸ்
அனைத்து சமுதாயங்களும் எங்களின் சகோதர சமுதாயங்கள் தான். அனைவருக்கும் சமூகநீதி கிடைத்தால் தான் தமிழ்நாடு புதிய வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எட்ட முடியும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க நானும், பா.மக.வும் ஓயாமல் பாடுபடுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அனைத்து சமுதாயங்களும் எங்களின் சகோதர சமுதாயங்கள் தான். அனைவருக்கும் சமூகநீதி கிடைத்தால் தான் தமிழ்நாடு புதிய வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட 26.02.2021 முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்
எனது கோரிக்கையை ஏற்று இதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்த முந்தைய ஆட்சியின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை தயாரித்தது முதல் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுனரின் ஒப்புதல் பெற்று அரசாணை பிறப்பிக்கப்படும் வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்த முந்தைய அரசின் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
10.50% இட ஒதுக்கீடு
பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை நேற்று காலை வெளியிடப்பட்டது. அதில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கான 20% இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு இல்லாமல் தான் செயல்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசாணை
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் 8/2021 கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் அரசாணையும் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் வன்னியர் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது; வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
முதல்வருக்கு வரவேற்பு
எனது அறிக்கை வெளியான சில மணி நேரங்களில், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, 10.50% இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசாணையை 200 புள்ளி ரோஸ்டர் பட்டியலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிடச் செய்துள்ளார். மாணவர் சேர்க்கை அறிவிக்கையில் இடம் பெற்றிருந்த பிழையை சுட்டிக்காட்டிய சில மணி நேரங்களில் அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரி செய்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.
வன்னியர் சமுதாய மாணவர்கள்
வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் அது நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்தே செயல்படுத்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாலும், தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகளும் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் அடிப்படையில் தான் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும், இனி அறிவிக்கப்படவுள்ள மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல், சட்டம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளிலும் 10.50% இடங்கள் வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
மருத்துவ கல்லூரியில் இடம்
6000 மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் வன்னியர் மாணவர்களுக்கு 630 இடங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். கல்வியில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாய மாணவர்களின் முன்னேற்றத்திற்கு இது பெருமளவில் பயனளிக்கும். இதன் மூலம் கல்வி மற்றும் சமூக நிலையில் இனி அச்சமூகம் படிப்படியாக முன்னேறும்.
42 ஆண்டுகால போராட்டம்
வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஓராண்டில் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டால் வன்னியர்களுக்கு குறைந்தது 10,500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள துறைகளில் பின்பற்றுவதற்காக 200 புள்ளி ரோஸ்டரில் 21 இடங்கள் வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வன்னியர்களின் சமூக நிலையும், வாழ்க்கைத் தரமும் மேம்படும். இது தான் எனது இலக்குகளில் ஒன்றாக இருந்தது. அதை எட்டுவதற்காகத் தான் கடந்த 42 ஆண்டுகளாக தொடர் சமூகநீதிப் போராட்டங்களை ஓயாமல் நடத்தி வருகிறேன். அதற்கு இப்போது பயன் கிடைத்துள்ளது.
இறுதியில் கிடைத்த வெற்றி
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான முந்தைய ஆட்சியில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக இரு ஆண்டுகளாக குரல் கொடுத்தோம். அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பல முறை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தோம். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இறுதி முயற்சியாக கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் நடப்பாண்டு ஜனவரி 28ஆம் தேதி வரை மொத்தம் 6 கட்டங்களாக 9 நாட்களுக்கு நடத்தப்பட்ட போராட்டத்தின் பயனாகவே வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.50% உள் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது.
சமூக நீதி பயணம் தொடரும்
சமூகநீதிக்கான போராட்டம் என்பதும், இயக்கம் நடத்துவதும் ஓடிக்கொண்டிருக்கும் நதியைப் போன்றது ஆகும். அது ஒரு போதும் ஓய்வதில்லை. எனது சமூகநீதிப் பயணம் வாழ்நாள் முழுவதும் தொடரும். தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த தருணத்தில் நான் அளிக்க விரும்பும் வாக்குறுதி இது தான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருவது தான் எனது இலக்கு. அது தான் தமிழ்நாட்டில் சமூகநீதியை முழுமையடையச் செய்யும். அனைத்து சமுதாயங்களும் எங்களின் சகோதர சமுதாயங்கள் தான். அனைவருக்கும் சமூகநீதி கிடைத்தால் தான் தமிழ்நாடு புதிய வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எட்ட முடியும். எனவே, அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க நானும், பா.மக.வும் ஓயாமல் பாடுபடுவோம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.