இரண்டு நவபாஷாண சிலைகள்..போகர் ஜெயந்தி நாளில் பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் -
சித்தர்களில் ஒருவரான போகரின் பிறந்த நாள் விழாவான போகர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழனியில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
சென்னை: வைகாசி மாத பரணி நட்சத்திர தினத்தன்று போகரின் பிறந்தநாள் தினத்தை பக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். போகர் திருவுருவ படம் மற்றும் போகர் செய்த நவபாஷாண சிலை உருவப் படத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி. மலைமேல் உள்ள தண்டாயுதபாணி மூலவர் நவபாஷனத்தினால் உருவாக்கப்பட்டவர். இதனை பிரதிஷ்டை செய்தவர் போகர் என்ற சித்தர். பல்வேறு நோய்களை நீக்கும் தன்மை கொண்டது இந்த நவபாஷாண சிலை. எனவேதான் அபிஷேக பஞ்சாமிர்தம் நோய் நீக்கியாக உள்ளது.

மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். மலைக்கோயில் அடிவாரத்தில் பாதவிநாயகர் இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது
இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். இடும்பனை ஆட்கொண்டார் முருகன்.
மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், "தண்டாயுதபாணி' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவராக காட்சி தருகிறார். காலப்போக்கில் இவரே பிரபலமாகிவிட்டார். சித்தர் போகரின் சமாதி இக்கோயிலுக்குள்ளேயே உள்ளது.
இந்த சிலையை போகர் செய்த 9 ஆண்டுகள் ஆனதாம். அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று சேகரித்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் செய்தார். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாம்.
தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம். அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும். பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்துள்ளார்.
சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட நவபாஷாண சிலைமீது அபிஷேகம் செய்து எடுக்கப்படும் விபூதி சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாத பொருட்களை உண்ணும் பக்தர்களுக்கு எவ்வித நோயும் நீங்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நவபாஷாண முருகன் சிலையை செய்த போகருக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத பரணி நட்சத்திர தினத்தன்று போகரின் பிறந்தநாள் தினத்தை பக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன்படி கேரளாவை சேர்ந்த தனியார் பக்தர்கள் அமைப்பு சார்பில் நவபாஷாண சிலையை செய்த போகர் சித்தரின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு பழனியில் வழிபாடு நடைபெற்றது.
போகர் திருவுருவ படம் மற்றும் போகர் செய்த நவபாஷாண சிலை உருவப் படத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். செய்தியாளர்களிடம் பேசிய ரெஜித்குமார், சித்தர் போகர் இரண்டு மகத்தான சிலைகள் செய்துள்ளதாகவும் ஒன்று பழனி மலை மீது உள்ள சிலை என்றும் மற்றொன்று போகர் ஜிவசமாதியாய் அமைந்துள்ள அவரது குகைக்கு உள்ளேயே இருப்பதாகவும் போகரே தெரிவித்துள்ளார். மேலும் காலம் கனிந்து வரும் பொழுது இரண்டாவது சிலை தானாகவே வெளிப்படும் என்றும் அப்போது பழனியை நோக்கி உலக மக்கள் அனைவரும் வழிபாடு நடத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளதாக கூறினார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நவபாஷாண சிலை செய்த போகர் இன் பிறந்த தினமான இன்று போகர் ஜெயந்தியை முன்னிட்டு பழனியில் அவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தி உள்ளோம் என தொரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications