சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரை விழா 11ல் கொடியேற்றம் - 19ல் திருத்தேரோட்டம், 21ல் ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா வரும் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 19ஆம் தேதியன்று திருத்தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்: மார்கழி மாத திருவாதிரைத் திருவிழா கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் வரும் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 19ஆம் தேதி திருத்தேரோட்டமும், 21ஆம் தேதி காலையில் ஆருத்ரா அபிஷேகமும் பிற்பகலில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும் என ஆலய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவபெருமானின் பஞ்சசபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த கோயிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது.
மார்கழி திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய தினமே ஆருத்ரா தரிசன நாள் ஆகும்.
மார்கழி திருவாதிரை
திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை நடராஜருக்கு, களி நைவேத்தியம் படைக்கப்படுகிறது. திருவாதிரையில் ஒரு வாய்க்களி' என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மை உண்டாக்கும். இந்தாண்டு திருவாதிரைத் திருவிழா வரும் 11ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன திருவிழா நிகழ்ச்சிகள்:
11.12.21- காலை 6-7 கொடியேற்றம்
12.12.21-இரவு வெள்ளி சந்திரபிரபை.
13.12.21- இரவு தங்க சூரியபிரபை.
14.12.21- இரவு வெள்ளி பூதவாகனம்.
15.12.21- இரவு வெள்ளி ரிஷபவாகனம் (தெருவடைச்சான்).
16.12.21- இரவு வெள்ளி யானைவாகனம்
17.12.21- இரவு தங்க கயிலாயவாகனம்
18.12.21- மாலை தங்கரதத்தில் பிச்சாடன மூர்த்தி வீதியுலா. அருள்மிகு சோமாஸ்கந்தர் வெட்டுங்குதிரையில் பவனி
19.12.21- ஞாயிறு அதிகாலை 5-5.30 மணிக்கு அன்னை சிவகாமி, அருள்மிகு ஆனந்த நடராசப்பெருமான் திருத்தேருக்கு எழுந்தருளல். மாலை 6 மணிக்கு மேல் திருத்தேரில் இருந்து ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருளல்.
20.12.21- திங்கள் ஆருத்ரா அபிஷேகம் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் காலை 10 மணிக்கு மேல் இராஜசபையில் பக்தர்களுக்கு காட்சியளித்தல். பகல் 2 மணிக்கு மேல் இராஜசபையில் இருந்து சிற்சபைக்கு அன்னை சிவகாமி, அருள்மிகு நடராசப்பெருமான் எழுந்தருளல் ஆருத்ரா தரிசன காட்சி நடைபெறும். இரவு முத்துப்பல்லக்கு காட்சி.
நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு முறை திருமஞ்சனம் நிகழ்த்தப்படுகிறது. சித்திரை மாத திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாத திருவாதிரை ஆகிய நாட்களில் நிகழ்த்தப்பெறும் திருமஞ்சனங்கள் நடசத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுவன. மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசியில் திருமஞ்சனம் நடக்கும்.
ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. கடைசி பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம் என போற்றப்படுகிறது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு திருவாதிரை நட்சத்திர நாளில் பூஜை செய்வதாக ஐதீகம். அப்போது சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்
நடராஜருக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இது உஷ்ணம் மிகுந்த நட்சத்திரமாகும். அதோடு வெம்மை மிகுந்த சுடலையின் சூடான சாம்பலை திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியையும் ஏந்தியிருப்பதால் நடராஜர் கடுமையான வெப்பத்தால் சூழப்பட்டிருக்கிறார். இந்த வெப்பத்தை தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.