சித்திரை திருவிழா நிறைவு: மலைக்கு திரும்பிய கள்ளழகர்- 21 பூசணிக்காயில் திருஷ்டி சுற்றிய மக்கள்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரைக்கு சென்றிருந்த கள்ளழகர் வைகையில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
மதுரை: மதுரைக்கு போய் வைகை ஆற்றில் இறங்கி லட்சக்கணக்கான மக்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டு மண்டூகமாக தவம் செய்த முனிவருக்கு சாப விமோசனம் அளித்துவிட்டு எட்டுநாட்களுக்குப் பின்னர் அழகர் மலைக்கு அதிர்வேட்டுகள் முழங்க வந்து சேர்ந்தார் கள்ளழகர். மக்களின் கண் எல்லாம் அழகர் மேல்தான் இருந்தது என்பதால் 21 பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி பக்தர்கள் சுற்றிப்போட்டு வரவேற்றனர்.
சித்திரை மாதம் வந்தாலே மதுரையில் விழாக்கோலம் களைகட்டும். மீனாட்சி திருக்கல்யாணமும் தேரோட்டமும், அழகர் மலையில் இருந்து இருந்து மதுரைக்குள் நுழையும் கள்ளழகரை எதிர்சேவை செய்து வரவேற்பு செய்வதுமாய் விடிய விடிய பக்தர்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தங்கக்குதிரையில் வைகை ஆற்றில் பக்தர்கள் வெள்ளத்தில் கடந்த வாரம் இறங்கி அருள்பாலித்த அழகர் மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளி மண்டூக மூனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். இரவு விடிய விடிய தசாவதார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மறுநாள் அதிகாலையில் பூப்பல்லாக்கில் எழுந்தருளினார். திங்கட்கிழமை காலையில் தங்கப்பல்லாக்கில் மீண்டும் மலைக்கு திரும்பினார்.
ஈஸ்டர் நாளில் தேவாலயத்தில் பிரச்சினை... பஞ்சாங்கத்தில் முன்னாடியே கணிச்சிருக்காமே!
பக்தர்கள் நேர்த்திக்கடன்
பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக இந்த ஆண்டு 27 உண்டியல் பெட்டிகள் மதுரைக்கு சென்றுவந்தன. மொத்தம் 451 மண்டகபடிகளில் அழகர் எழுந்தருளினார். குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த தானியங்களை பாரம்பரிய வழக்கப்படி நெற்களஞ்சியத்தில் செலுத்தினர்.
18ஆம் படி கருப்பண்ணசாமி
திங்கட்கிழமை இரவு அப்பன்திருப்பதி உள்ளிட்ட மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் அப்பன்திருப்பதியில் விடிய, விடிய திருவிழா நடைபெற்றது. நேற்று அழகர்கோவில் கோட்டைவாசல் பகுதிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் திரும்பினார். அங்கு 18ஆம்படி கருப்பணசாமி கோவில் முன்பு அழகருக்கு சிறப்பு பூஜைகளுடன் வையாழி நிகழ்ச்சியும் தீபாராதனையும் நடந்தது.
கருப்பசாமியிடம் அனுமதி
அழகர் கோவிலை காவல் காத்துக்கொண்டிருக்கும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி மேல் இப்பகுதி மக்களுக்கு பயங்கர பக்தி உள்ளது.
அநியாயங்கள் செய்தால் கருப்பசாமி கேட்பார் என்பதாலேயே இந்த கருப்பசாமிக்கு பயமும் பக்தியும் அதிகம். சுந்தராஜ பெருமாள் கோவிலிலிருந்து வெளியேறும்போது கருப்பணசாமியிடம் அனுமதி பெற்று செல்லும் நிகழ்வு காலம் காலமாக நடைபெற்று வருகிறது. தினசரியும் அழகர்மலைக்கோவில் பூட்டபட்டதும் கதவின் சாவி பதினெட்டாம் படி கருப்பசாமியின் முன்பு வைத்துவிட்டு செல்வர். மறுநாள் காலை கோவில் திறக்கும் முன் கருப்பசாமியிடம் சாவியை பெற்று கதவை திறக்கும் சம்பிரதாயம் இன்று வரை நடைபெற்று வருகிறது.
காவல் காக்கும் கருப்பசாமி
சித்திரை திருவிழாவிற்கு மதுரைக்கு புறப்படும்போதும் மதுரையிலிருந்து கோவிலுக்கு திரும்பும்போதும் அழகர் அணிந்த நகைகள் எண்ணப்பட்டு அந்த பட்டியல் பதினெட்டாம் படி கருப்பசாமி முன்பு படித்து காட்டப்படும். கோவில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.
விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
மதுரைக்கு சென்று விட்டு மலைக்கு திரும்பி அழகரை கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர். அதிர்வேட்டு முழக்கம் விண்ணை எட்டியது. வானவேடிக்கைகள் மேளதாளங்களுடன் தீவட்டி பரிவாரங்களும் முன்னே செல்ல தங்கப்பல்லாக்கில் மலைக்கு திரும்பிய அழகரை 21 பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி சுற்றி வந்து திருஷ்டி கழித்தனர். உற்சவ சாந்தியுடன் திருவிழா இன்று நிறைவடைகிறது.