சனி பெயர்ச்சி : சனி பகவான் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள் - தோஷ நிவர்த்தி யாகங்களில் பங்கேற்பு
சனி பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, குச்சனூரில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்துள்ளனர்.
சென்னை: சனி பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனிபகவான் ஆலயங்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர். இதே போல சனி சாந்தி யாகங்களில் பக்தர்கள் பங்கேற்று வேண்டிக்கொண்டனர்.
கிரகங்கள் இடம் பெயர்வது இயல்பான நிகழ்வுதான் என்றாலும் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும்.
மொத்தம் 12 ராசிகள் உள்ளதால் அந்த முப்பது ஆண்டுகளையும் 12 ராசிகளுக்கும் சராசரியாக பிரித்தால் இரண்டரை ஆண்டுகள் வரும். அப்படி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருந்து அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்றொரு ராசிக்கு சனி இடம் பெயர்தலையே சனிப்பெயர்ச்சி என்கிறோம்.
தனுசு ராசிக்கு இடம் மாறும் சனி
சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி நாளை செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
சனிபகவான் ஆலயம்
திருநள்ளாறு கோவிலில் பக்தர்கள் கூட்டம் சனிக்கிழமை முதலே அதிகரித்து வருகிறது. சனி பெயர்ச்சி விழா முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கேசவன் தெரிவித்துள்ளார்
மேலும் 19ஆம் தேதி மட்டும் மதுபானக் கடைக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை
திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. சனி பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த 2 வாரங்களாக திருநள்ளாறுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகமான அளவில் இருந்து வருகிறது. சனின்கிழமை மட்டும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர்.
நளன் குளத்தில் நீராடல்
சனிப்பெயர்ச்சி விழாவுக்காக ஏற்படுத்தப்பட்ட வரிசை முறைகள் நேற்று நடைமுறைப்படுத்தப்பட்டன. அதன்படி தர்ம தரிசனம், ரூ.200, ரூ.500 கட்டண வரிசைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நளன் குளத்தில் நீராடும் பக்தர்கள் தாங்கள் அணிந்திருக்கும் உடையை குளத்திலேயே விட்டுச் செல்வதால், சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, குளக்கரையில் உள்ள படிகளில் ஆடைகளை விட்டுச் செல்லலாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
சனி சாந்தி யாகம்
இந்த சனி பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்கு நன்மையும், தீமையும் கலந்த பலன்களை அளிக்கிறார். பல இடங்களில் சனி சாந்தி யாகங்கள், தோஷ நிவர்த்தி யாகங்கள் நடைபெற்றன. ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி விருச்சிகம்,தனுசு, மகரம். சனி தோஷ நிவர்த்தி சனி சாந்தி யாகம் செய்ய சனி பகவானுக்கு விசேஷமான சனிக்கிழமை பரிபூரண பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பக்தர்கள் தரிசனம்
சனி பெயர்ச்சியை முன்னிட்டு டிசம்பர் 16ஆம் தேதியன்று சனிக்கிழமை அன்று காலை 10-30 முதல் 2 மணி வரை சனி தோஷ நிவர்த்தி சனி சாந்தி யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தோஷ நிவர்த்தி யாகத்திற்கு தேவையான பொருட்களை அளித்து தரிசனம் செய்தனர்.